கவுகாத்தி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் இந்திய அணி தோல்வி அடையப் போகிறது என்று முடிவு செய்துவிட்டனர். எனினும், இன்னும் போட்டி முடியாததால், 314 ரன்கள் பின்தங்கி இருக்கும் இந்திய அணி இந்த போட்டியில் எப்படி வெற்றி பெற முடியும் என்பதையும், இந்திய அணியின் சூழ்நிலை என்ன என்பதையும் பார்க்கலாம்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரைச் சமன் செய்ய முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் சேர்த்தது. இந்தியா வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 288 ரன்கள் பின்தங்கி இருந்தது. அப்போது தென்னாப்பிரிக்க அணி 'ஃபாலோ-ஆன்' கொடுத்திருக்கலாம். ஆனால், தங்களின் பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்பதோடு, நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வேண்டி வந்தால் அது மிகவும் சிக்கலாகிவிடும் என்ற உஷாரான முடிவால் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி மொத்தமாக 314 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில், நான்காவது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி மேலும் 200 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு 500-க்கும் அதிகமான ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் இந்திய அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நிச்சயம் தாக்குப் பிடிக்க முடியாது.
இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இந்திய அணி செய்ய வேண்டிய ஒரே காரியம் - தென்னாப்பிரிக்கா அணியை இரண்டாவது இன்னிங்ஸில் விரைவாக ஆட்டம் இழக்கச் செய்ய வேண்டும். அதாவது, தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமாக 120 ரன்கள் எடுப்பதற்குள் அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும்.
அப்படி செய்தால் இந்திய அணிக்கு 400 ரன்களை ஒட்டிய இலக்கு நிர்ணயம் செய்யப்படும். இதுவும் சவாலானது என்றாலும், ஒன்றரை நாள் மீதம் இருக்கும் போது 400 ரன்களை நிதானமாக எடுக்க வாய்ப்பு உள்ளது. இது மட்டுமே இப்போது இந்திய அணியிடம் இருக்கும் ஒரே வாய்ப்பு.
தென்னாப்பிரிக்க அணியை 120 ரன்களுக்குள் 'ஆல் அவுட்' செய்ய வேண்டும் என்றால், நான்காவது நாள் ஆட்டத்தின் காலையில் தங்களிடம் இருக்கும் புதிய பந்தை பயன்படுத்தித் தென்னாப்பிரிக்கா விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த முயற்சிக்க வேண்டும்.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் வீசப்போகும் முதல் 10 ஓவர்கள் தான் அந்த இன்னிங்ஸின் போக்கை முடிவு செய்வதாக இருக்கும். நான்காவது நாள் அன்று ஆடுகளத்தில் விரிசல் இருக்கும் என்பதால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் 10 ஓவர்களுக்கு பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் அதற்குச் சரியான 'லைன்' மற்றும் 'லென்தில்' பந்து வீச வேண்டும். இந்த இரண்டு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் தென்னாப்பிரிக்க அணியை 120 ரன்களுக்குள் 'ஆல் அவுட்' செய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்து இந்திய அணி 400 ரன்களை எப்படி 'சேசிங்' செய்ய முடியும் என்ற கேள்வி எழும். நிச்சயமாகத் தென்னாப்பிரிக்க அணி நான்காவது இன்னிங்ஸில் புதிய பந்தை வைத்து இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும். எனவே, பந்து பழையதாகும் வரை இந்திய அணி மிகவும் நிதானமாக ஆடுவதே ஒரே வழி.
சுமார் 35-40 ஓவர்கள் வீசப்பட்ட பின் அந்தப் பந்து பழையதாக இருக்கும். அப்போது வேகப்பந்து வீச்சுக்கும், சுழற்பந்து வீச்சுக்கும் பெரிய அளவில் ஒத்துழைப்பது கடினம். அந்த நேரத்தில் தான் இந்திய அணி ஓரளவு ரன் சேர்க்க முயல வேண்டும்.
எப்படிப் பார்த்தாலும் இந்திய அணி 300 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தித் தோல்விக்கு வழிவகுக்கும். எனவே, முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் களத்தில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும். இது மட்டுமே இப்போது இந்திய அணிக்கு இருக்கும் வாய்ப்பு. நிச்சயம் ஒரு மேஜிக் நடந்தால் மட்டுமே இவையெல்லாம் நடக்கும். இந்திய வீரர்கள் நான்காம் நாள் ஆட்டத்தில் சுதாரிக்கிறார்களா என்று பார்க்கலாம்.