மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கேஎல் ராகுலுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தில் கேஎல் ராகுல் - சிராஜ் கூட்டணி தொடர்ந்தது. தொடக்கம் முதலே விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி வந்தார்.

அதில் 85 ரன்களை எட்டிய பின், ரபாடா ஓவரிலேயே பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி அசத்தினார். அந்த நேரத்தில் 5 ரன்களுடன் ஆடி கொண்டிருந்த சிராஜ் ஆட்டமிழக்க, கேஎல் ராகுல் சதமடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இதன்பின் கோட்சியே வீசிய ஓவரில் சிக்சரை விளாசி தனது 8வது டெஸ்ட் சதத்தை விளாசி அசத்தினார்.
2021ஆம் ஆண்டு சென்சுரியனில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் சதமடித்திருந்த நிலையில், தற்போது சென்சுரியன் மைதானத்திலேயே மீண்டும் இன்னொரு சதத்தை விளாசி இருக்கிறார். சென்சுரியன் மைதானத்தில் 2 சதங்களை விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். இவரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களை குவித்தது.
107 ரன்களுக்கு இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய நிலையில், டெய்லண்டர்களை ஒருங்கிணைத்து கேஎல் ராகுல் தென்னாப்பிரிக்கா பவுலர்களை எதிர்கொண்ட விதம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் கேஎல் ராகுலின் டெஸ்ட் கிரிக்கெட் கரியரில், மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்று பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி இருக்கிறார். உங்களின் தெளிவான சிந்தனை தான் என்னை ஆச்சரியப்படுத்தியது. கேஎல் ராகுலின் ஃபூட் வொர்க் துல்லியமாக இருந்தது. இப்படி செயல்பட வேண்டுமென்றால், சிந்தனையில் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும். இந்த போட்டியின் முக்கியமான சூழலில் சதம் விளாசப்பட்டுள்ளது.
இந்திய அணியின் நேற்றைய சூழலை கருத்தில் கொண்டால், 245 ரன்கள் எடுத்தது மகிழ்ச்சியாக இருக்கும். பர்கர் மற்றும் கோட்சியே இருவரும் தென்னாப்பிரிக்கா பவுலிங் லைன் அப்பில் சிறந்த வீரர்களாக தெரிகிறார்கள். ஆடுகளத்தை வைத்து பார்க்கும் போது தென்னாப்பிரிக்கா அணியின் பவுலிங் அந்த அணிக்கு மகிழ்ச்சியை அளிக்காது என்று பதிவிட்டுள்ளார்.