பெங்களூரு: சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சோக்கர்ஸ் அணியாக இந்திய உருவாகி உள்ளதா என்ற ரசிகர் எழுப்பிய கேள்விக்கு இந்திய அணி முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பதில் அளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி ரசிகர்களிடையே ஒட்டுமொத்த நம்பிக்கையையும் குலைத்துள்ளது. உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு வெளிநாட்டு மண்ணில் வென்று இந்திய அணி ரசிகர்களின் சோகத்திற்கு மருந்து போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வழக்கம் போல் இந்திய அணி மீண்டும் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. ஏற்கனவே 11 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி தொடரை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. கடைசியாக 2013ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.
அதன்பின் நடைபெற்ற எந்த டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை. இதனிடையே இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாந்த் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ரசிகர் ஒருவர், சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சோக்கர்ஸாக இந்திய அணி உருவாகிவிட்டதா? ஏனென்றால் கடைசியாக நடைபெற்ற 10 ஐசிசி நாக் அவுட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்தது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், இந்திய அணியை சோக்கர்ஸ் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் 2021-22ல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த போது முதல் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான பின், மீண்டும் எழுச்சிபெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வெல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. என்னை பொறுத்தவரை இந்திய அணியின் மிகச்சிறந்த வெற்றி அது.
ஏனென்றால் இந்திய அணியின் முதல் நிலை வீரர்கள் அனைவரும் காயத்தால் விலகினார்கள். ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக ஐசிசி தொடர்களை வெல்லாமல் இருப்பது நிச்சயம் சரியல்ல என்று விமர்சித்துள்ளார். வழக்கமாக இந்திய அணியையும், வீரர்களையும் பொளந்து கட்டும் வெங்கடேஷ் பிரசாத், இந்திய அணிக்காக ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.