கேப் டவுன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த இன்னிங்ஸ் தோல்வி அனைவரையும் உலுக்கியுள்ளது. சமீப நாட்களில் இந்திய அணி இதுபோன்ற மோசமான தோல்வியை வெளிநாடுகளில் பெற்றதில்லை. கடந்த முறை தென்னாப்பிரிக்காவில் தோல்வியடைந்த போதும், சிறு சிறு தவறான முடிவுகள் காரணமாகவே தோல்வியடைந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இம்முறை வீரர்களின் ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கொஞ்சம் கூட பொறுப்பின்றி இளம் வீரர்களை போல் ஆட்டமிழந்துள்ளார். 2013, 2018 ஆகிய ஆண்டுகளில் ஏற்கனவே ரோகித் சர்மா தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளார்.
தற்போது 3வது முறையாக கேப்டனாக வந்துள்ள ரோகித் சர்மா அனுபவத்தை கொண்டு சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் 10 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, வெறும் 128 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ரோகித் சர்மா சொதப்பினால், கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழும். இதனை உணர்ந்த ரோகித் சர்மா உடனடியாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்றைய பயிற்சியில் விராட் கோலி, கேஎல் ராகுல், பும்ரா, சிராஜ் உள்ளிட்ட எந்த சீனியர் வீரர்களும் பங்கேற்கவில்லை.
ஆனால் முதல் நபராக ரோகித் சர்மா வலைபயிற்சியை தொடங்கினார். இவருடன் ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் இணைந்து கொண்டனர். கேப்டவுன் பிட்ச் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களின் பவுன்ஸ் ஆகியவற்றை கணக்கில் கொண்டே ரோகித் சர்மாவுக்கு பந்துவீசப்பட்டுள்ளது. அதேபோல் த்ரோடவுன் பந்துகளையும் வெவ்வேறு லெந்த்களில் வீசப்பட்டுள்ளது.
அதேபோல் கேப்டவுன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி ஒரு முறை கூட வென்றதில்லை. இதனால் கேப்டவுன் மைதானத்தில் வெல்லும் பட்சத்தில் ரோகித் சர்மா தனது கேப்டன்சி ஆளுமையையும், பேட்டிங் திறமையையும் நிரூபிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் பல்வேறு வியூகங்களையும் ஆலோசித்ததாக தெரிய வந்துள்ளது.