மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக புஜாராவை விடவும் சிறந்த வீரரை இதுவரை கண்டறியப்படவில்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சென்சுரியனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு அனுபவ வீரர்களை ஒரேயடியாக மாற்றியதே காரணமாக பார்க்கப்படுகிறது. விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவர் மட்டுமே தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடிய அனுபவம் கிடையாது. எதிர்காலம் குறித்து எந்தவித யோசனையும் இல்லாமல் இந்திய அணியை ஒட்டுமொத்தமாக மாற்றியதன் காரணமாக இந்திய அணி மிகப்பெரிய தோல்வியை பெற காரணமாக உள்ளது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசுகையில், இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் புஜாரா என்ன காரணத்திற்காக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்றே புரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் இவர்கள் இருவரும் தான் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். விராட் கோலி எவ்வளவு ரன்கள் சேர்த்துள்ளாரோ, அதே அளவிலான ரன்களை புஜாராவும் சேர்த்துள்ளார்.
அவர் என்ன காரணத்திற்காக தேர்வு குழு வெளியேற்றியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவை விடவும் சிறந்த கிரிக்கெட் வீரரை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவர் நிதானமாக தான் ரன்களை சேர்ப்பார். ஆனால் இந்திய அணியை காப்பாற்றி வந்தது அவர் தான். அவர் சிறப்பாக விளையாடியதால் தான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியால் வெற்றிபெற முடிந்தது.
சென்சுரியன் டெஸ்டை பொறுத்தவரை, போட்டி நடந்த 3 நாட்களிலும் இந்திய அணி எந்த இடத்திலும் காண முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் இந்திய அணி சேர்த்தற்கு கேஎல் ராகுல் மட்டுமே காரணம். மிகச்சிறப்பாக விளையாடி ஒரு சதத்தை விளாசி அசத்தினார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 131 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிலும் விராட் கோலியின் ஸ்கோரை எடுத்துவிட்டு பார்த்தால் இன்னும் கஷ்டமாகிவிடும். அதனால் இந்திய அணியின் தோல்வி முதல் இன்னிங்ஸிலேயே முடிவாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.