சென்சுரியன்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட்டை அதிக முறை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா அணியின் ககிசோ ரபாடா படைத்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா -ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ரபாடா வீசிய வேகத்தில் ரோகித் சர்மா வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மாவின் ஃபேவரைட் ஷாட்டான புல் ஷாட் மூலமாக அவரின் விக்கெட்டை தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா வீழ்த்தி அசத்தினார். போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்திருந்ததால், ஆடுகளத்தில் ஈரப்பதம் காணப்பட்டது. இதனையறிந்த ரபாடா அதிக வேகம் கொடுக்காமல் ஷார்ட் பாலை வீசினார். அதற்கு முன்பாகவே ஃபைன் லெக் திசையிலும் ஃபீல்டரை வைத்திருந்தார்.
இதனையறிந்து ரோகித் சர்மா தனது பேட்டிங்கில் நம்பிக்கை வைத்து புல் ஷாட்டை விளையாடினார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி விரித்த வலையில் ரோகித் சர்மா தானாகவே சென்று சிக்கி கொண்டார். ரோகித் சர்மா புல் ஷாட்டில் புலி என்றாலும், அண்மை காலங்களில் அவர் அதிகளவில் புல் ஷாட் மூலமாகவே ஆட்டமிழந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவின் விக்கெட் வீழ்த்தியதன் மூலமாக தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா புதிய சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சம்ராவை அதிக முறை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரபாடா இருக்கிறார். இதுவரை ரபாடா மட்டும் ரோகித் சர்மாவை 13 முறை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவருக்கு பின் நியூசிலாந்து அணியின் டிம் சவுதி 12 முறை வீழ்த்தி 2வது இடத்தில் இருக்கிறார்.
இலங்கை அணியின் மேத்யூஸ் 10 முறையும், ஆஸ்திரேலியா ஸ்பின்னர் நேதன் லயன் 9 முறையும், நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் போல்ட் 8 முறையும் ரோகித் சர்மாவை வீழ்த்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ரபாடா 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 7வது தென்னாப்பிரிக்கா வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும், முதல் நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்துள்ளது. கேஎல் ராகுல் 70 ரன்களுடனும், சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.