அகமதாபாத்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், இந்திய அணிக்காக திலக் வர்மா 42 பந்துகளில் 73 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை திலக் வர்மா படைத்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் வீரரான திலக் வர்மா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
2007 செப்டம்பர் முதல் 2024 ஜூன் வரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக18 டி20 போட்டிகளில் 429 ரன்கள் எடுத்திருந்த ரோஹித்தின் சாதனையை, வெறும் 10 டி20 போட்டிகளில் 496 ரன்கள் குவித்து திலக் தகர்த்தெறிந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தச் சாதனையை அடைய அவருக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7ஆவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே அதை எட்டி வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

அந்த ஆட்டத்தில் நம்பர் 3 களமிறங்கிய திலக், 42 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்து வலுவான அடித்தளத்தை அமைத்தார். இந்த ஆட்டம், 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் இறுதி சர்வதேசப் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். அவர் 25 பந்துகளில் 63 ரன்கள் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். மேலும், 16 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், டி20 சர்வதேசப் போட்டிகளில் 2000 ரன்களை எட்டிய ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இவர்கள் இருவரின் அபார பங்களிப்பால் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலிடத்தில் உள்ளார். அவர் 23 போட்டிகளில் 606 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த உலகப் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். திலக் வர்மா தனது 496 ரன்களுடன் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் உள்ளார்.