ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ள நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உடன் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இருவரும் ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளனர். ஐபிஎல் தொடருக்கு பிறகு சொந்த மண்ணில் இருவரும் ரசிகர்கள் முன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளனர். விராட் கோலிக்கு தற்போது 37 வயதாகிறது. ரோகித் சர்மாவுக்கு வரும் ஏப்ரல் மாதம் வந்தால் 39 வயதாகிவிடும்.

இதனால் இருவரும் அடுத்த 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்றாலும், விராட் கோலி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் டக் அவுட் ஆகி கடைசி ஒரு நாள் போட்டியில் மட்டும் தான் 74 ரன்கள் அடித்திருந்தார்.
இந்த தொடரை இந்திய அணி இழந்தது. இந்த சூழலில் பிசிசிஐ நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ரோகித் சர்மாவுக்கு உடல் தகுதி மற்றும் களத்தில் ரன்கள் குவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. அடுத்தடுத்து இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதால், கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரன் எடுக்க வேண்டிய அவசியத்தை தேர்வு குழு இருவரிடமும் தெரிவித்து இருக்கிறது.
மேலும் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ள விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் குறைந்தது 4 போட்டிகளிலாவது பங்கேற்க வேண்டும் என்று தேர்வு குழு அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு தேவையில்லாத அழுத்தம் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடருடன் கிரிக்கெட்டுக்கு இருவரும் டாட்டா பை, பை காட்டி விட்டு சென்று விடுவார்களா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.