துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிரடி ஆட்டம் ஆடிய விராட் கோலி, ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறி, முதலிடத்தில் இருக்கும் ரோஹித் சர்மாவுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று (புதன்கிழமை) வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் அவரைத் தரவரிசையில் எகிற வைத்துள்ளது.

இந்தத் தொடரில் 302 ரன்கள் குவித்து 'தொடர் நாயகன்' விருது வென்ற கோலி, தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது முதலிடத்தில் இருக்கும் ரோஹித் சர்மாவுக்கும், 2-வது இடத்தில் இருக்கும் விராட் கோலிக்கும் உள்ள வித்தியாசம் வெறும் 8 புள்ளிகள் மட்டுமே. ஏப்ரல் 2021-ல் பாபர் அசாமிடம் முதலிடத்தை இழந்த பிறகு, இப்போதுதான் விராட் கோலி மீண்டும் முதலிடத்தை நெருங்கியுள்ளார்.
ஒருநாள் பேட்டிங் தரவரிசையின் முதல் 5 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். காயம் காரணமாகத் தொடரில் ஆடாத சுப்மன் கில் 5-வது இடத்தில் நீடிக்கிறார். தற்காலிக கேப்டனாகச் செயல்பட்ட கே.எல்.ராகுல் 2 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் இந்தியா கலக்கியுள்ளது. தென்னாப்பிரிக்கா தொடரில் மிடில் ஓவர்களில் விக்கெட் வேட்டை நடத்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 3 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட்: பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஷஸ் தொடரில் கலக்கிய மிட்செல் ஸ்டார்க் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8-வது இடத்தில் உள்ளார்.
டி20: கட்டாக் போட்டியில் கலக்கிய அக்சர் படேல் 13-வது இடத்திற்கும், அர்ஷ்தீப் சிங் 20-வது இடத்திற்கும், பும்ரா 25-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
2026-ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள், குறிப்பாக ரோஹித் மற்றும் கோலி தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.