லண்டன்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்து லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்த பின் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் களத்திலேயே கண்ணீர்விட்டு அழுதனர். அதிலும் தொடர் நாயகன் விருது வென்ற போது விராட் கோலி, எந்த கருத்தும் கூறாமல் மேடையில் இருந்து கீழ் இறங்கினார்.

ஆசிய கோப்பை, உலகக்கோப்பை என்று தொடர்ந்து 3 மாதங்களாக இந்திய அணி வீரர்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடி வந்தாலும், இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி வீரர்கள் அனைவரும் மனதளவில் கலங்க வைத்துள்ளது. இதனால் உடனடியாக தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் ஏராளமான வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
இதனால் விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில், பும்ரா, சிராஜ், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். ஆசிய கோப்பை தொடரின் போது பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதிக்கு குழந்தை பிறந்த நிலையில், பும்ரா தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
அதேபோல் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகாவுடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அதேபோல் நீண்ட நாள் மேனேஜருடனான ஒப்பந்தத்தை முடித்து கொண்டுள்ள விராட் கோலி, தனது சொந்த நிறுவனத்தை தொடங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் நேற்று மும்பை திரும்பிய நிலையில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் தனது நண்பர்களை சந்திக்க லண்டன் சென்றுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் லண்டனில் உள்ளதால், ரசிகர்கள் பலரும் லண்டனில் அப்படி என்ன இருக்கிறது என்று விவாதித்து வருகின்றனர்.