விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜெய்ஸ்வால் 121 பந்துகளை எதிர் கொண்டு கடைசிவரை ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்தார்.
இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் நல்ல தொடக்கத்தை ஜெய்ஸ்வால் பெற்றாலும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் தடுமாறினார். ஆனால் இந்த ஆட்டத்தில் நிதானமாக விளையாட ஜெய்ஸ்வால், ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் ஆட்டநாயகன் விருதை ஜெய்ஸ்வால் வென்றிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நான் என்னுடைய இன்னிங்ஸை மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். இதற்கு நான் எப்போதும் நன்றி உணர்வுடன் இருக்கின்றேன். நான் பேட்டிங் செய்யும்போது ரோஹித் சர்மாவுடன் அதிக நேரம் பேசினேன். எப்படி விளையாட வேண்டும்.
எந்த மாதிரி விளையாட வேண்டும். எந்த வேகத்தில் ரன் குவிக்க வேண்டும் என்பது குறித்து எல்லாம் பேசினேன். நான் முதல் இரண்டு போட்டிகளில் நல்ல தொடக்கத்தை பெற்றாலும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை . இந்த ஆட்டத்தில் எப்படி இன்னிங்ஸை பேலன்ஸ் செய்து தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் என்று எண்ணினேன்.
தற்காப்பு ஆட்டத்தையும் அதிரடி ஆட்டத்தையும் கலந்து விளையாட வேண்டும் என்று நினைத்தேன். சில சமயம் சிங்கிள்ஸ் எடுத்தாலே ரன்கள் கிடைக்கும். இதனால் என்னுடைய இன்னிங்ஸை கட்டமைக்க முயற்சி செய்தேன். முதலில் பேட்டிங் செய்யும்போது என்னுடைய எண்ணங்களை நான் கட்டுப்படுத்த வேண்டும். எந்த இடத்தில் எந்த ஷாட் விளையாட வேண்டும் என்பது குறித்து அப்போதுதான் யோசிக்க முடியும்.
சில சமயம் எந்த பவுலரை எப்படி அடித்து ஆட வேண்டும் என்பது குறித்து எல்லாம் யோசிக்க வேண்டும். இதேபோன்று விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தபோது, அவர் அதிரடியை காட்டினார். இதன் மூலம் எனது பணி சுலபமாக மாறியது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு இலக்கு நிர்ணயித்து விளையாட அவர் எனக்கு உதவி செய்தார் என்று ஜெய்ஸ்வால் கூறினார்.