கொழும்பு : இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பு நகரில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்? ஆடுகளம் எவ்வாறு இருக்கும்? இன்றைய ஆட்டத்தில் மழை பெய்யுமா என்பதை தற்போது பார்க்கலாம்.
கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் பெரும்பாலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக தான் ஆடுகளம் அமையும். இந்த மைதானத்தில் 300 ரன்கள் அடிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது. எனினும் கடந்த சில காலமாக கொழும்பு ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும் சுழற் பந்துவீச்சாளர்கள் கை ஓங்கி இருக்கும்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா குல்திப் யாதவ், அக்சர் பட்டேல் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்கும். இந்த நிலையில் வானிலையை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை முழுவதும் கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் போட்டி எதிர்பார்த்தபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா இலங்கை அணிகள் கடைசியாக மோதிய நான்கு ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி மூன்று முறை 100 ரன்களைக் கூட தொடவில்லை என்பது சோகமான விஷயம். கடந்த 10 ஆண்டுகள் பொருத்தவரையில் இந்தியாவும் இலங்கையும் 24 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் மோதியிருக்கிறது. இதில் இலங்கை அணி வெறும் மூன்று போட்டிகளில் தான் வெற்றி பெற்று இருக்கிறது.
மேலும் இலங்கை அணியை பொறுத்தவரை பதிராணா, மதுசங்கா போன்ற வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கிறார்கள். இதனால் முஹம்மது சீராஸ் மற்றும் ஈஷா மலிங்கா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை மேகங்கள் சூழ்ந்து இருந்தால் ஆட்டத்தில் சில ஓவர்கள் நிச்சயம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
மேலும் டக்வத் லூயிஸ் விதி குறிக்கிடும் என்பதால் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவது சரியான முடிவாக இருக்கும். இலங்கை அணியை பொறுத்தவரை தொடக்க வீரர் நிஷாங்கா மட்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல பார்மில் இருக்கிறார். 2023 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நிசாங்காவை விட அதிக ரன்கள் எடுத்த வீரர் யாருமே சர்வதேச அளவில் கிடையாது. இந்தியா அலட்சியமாக விளையாடவில்லை என்றால் நிச்சயம் வெற்றி பெறும்.