கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 33 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். டி20 உலக கோப்பையை வென்ற பிறகு கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் தற்போது தான் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார்கள்.
கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் இந்தியா விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கை அணிவில் நிசங்கா 56 ரன்களும், துனித் வெல்லாலகே 67 ரன்களும் எடுக்க இலங்கை அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணி களம் இறங்கியது. இதில் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா எந்த அளவுக்கு ஃபார்மல் இருந்தாரோ, அதை அப்படியே இலங்கைக்கு எதிராகவும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இலங்கை அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்த ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போல் ரன்களை சேர்த்து வந்தார். இதனால் இந்திய அணி 5.3 ஓவர்கள் எல்லாம் 50 ரன்கள் கடந்து அபாரமாக விளையாடியது. கேப்டன் ரோகித் சர்மா மட்டும் 33 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதில் ஏழு பவுண்டர்களும் மூன்று இமாலய சிக்சர்களும் அடங்கும்.
இலங்கைக்கு எதிராக எப்போதுமே ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிராக 53 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 1919 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 264 ரன்கள் அவர் குவித்திருக்கிறார். இலங்கை அணிக்கு எதிராக மட்டும் அவர் 53 சிக்ஸர்களும், 181 பௌண்டரிகளும் அடித்து இருக்கிறார்.
இதனால் இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்வது ரோகித் சர்மாவுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆகும். பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகுவதற்கு முன்பு இந்திய அணி வெறும் 6 ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.