கொழும்பு : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பு நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் சுப்மான் கில்,கே எல் ராகுல், ரிஷப் பண்ட்,முஹம்மது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங் போன்ற இந்தியாவின் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் இந்தத் தொடரில் ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்ற பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி இதுவாகும். இந்த நிலையில் முன் எப்போதும் யாருமே செய்யாத ஒரு விஷயத்தை கம்பீர் பயிற்சியாளராக தைரியமாக செய்திருக்கிறார்.
அதாவது பேட்ஸ்மேன்களும் பந்து வீச வேண்டும் என்ற ஒரு முறையை கம்பீர் கொண்டு வந்திருக்கிறார். இதன் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடர்கள் கூட சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், ரியான் பராக் போன்ற பேட்ஸ்மேன்கள் பந்துவீசி பயிற்சி பெற்று வந்தனர்.
இதன் மூலம் இந்தியாவின் பிரதான பவுலர்கள் தடுமாறினால் கூட பேட்ஸ்மேன்கள் பந்து வீசினால் சில ஓவர்கள் சமாளிக்க முடியும்.இந்த நிலையில் ஒருநாள் அணியில் இடம் பிடித்திருக்கக்கூடிய வீரர்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு பெரிய அளவில் பந்து வீச தெரியாது. விராட் கோலி கூட ஓடி வந்து பந்து வீசி சில விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். ஆனால் அவருடைய பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் அடிக்கும் நிலையும் ஏற்படும்.

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை சுழற் பந்து வீச சொல்லி கம்பீர் அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் இந்திய அணியில் தற்போது பேட்டிங்கிற்கு கடும் போட்டி இருப்பதால் கூடுதலாக பந்து வீசத் தெரிந்தால் அது ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக கருதப்படும். இதை காரணம் காட்டி அணியிலிருந்து யாராலும் நீக்க முடியாது.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது பேட்டிங் பயிற்சி செய்வதோடு பந்துவீச்சு பயிற்சியும் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாக இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனினும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கிறது. முதுகு வலி காரணமாக பல முக்கிய தொடர்களில் அவர் பங்கேற்காமல் இருந்திருக்கிறார். இந்த சூழலில் அவர் பந்து வீசுவது அவருடைய முதுகு வலியை அதிகப்படுத்தும் என்றும் தெரிகிறது. எனினும் கம்பீர் எடுத்திருக்கும் இந்த தைரிய முடிவு இந்திய அணிக்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.