ஜடேஜாவின் உலக சாதனையை தடுத்த அஸ்வின்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா.. 3 நாளில் முடிந்த ஆட்டம்
மொஹாலி: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஜடேஜா 175 ரன்களும், ரிஷப் பண்ட் 96 ரன்களும் விளாசினர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 574 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது.

ஜடேஜா 5 விக்கெட்
3ஆம் நாள் ஆட்டநேர தொடக்கத்தில் இலங்கை அணி 108 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஆட்டத்தை தொடங்கியது. ஒரு முனையில் வேகப்பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்து விக்கெட்டை எடுக்க மறுமுனையில் ஜடேஜா துல்லியமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்தார். திக்வெல்லா, லக்மல், விஸ்வா, லஹிரு திருமானே ஆகியோர் விக்கெட்டுகளை ஜடேஜா கைப்பற்ற இல்ங்கை அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஃபாலோ ஆன்
இதன் மூலம் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா, 400 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணிக்கு ரோகித் சர்மா ஃபாலோ ஆனை விதித்தார். இதனையடுத்து இலங்கை அணி மீண்டும் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தமிழக வீரர் அஸ்வின் திரிமானே, நிசாங்கா ஆகியோரை வீழ்த்தினார்.

இலங்கை திணறல்
இதன் பின்னர் கருணரத்னே, மேத்தீயுஸ் ஆகியோர் போராடி ரன்கள் சேர்த்தனர். மேத்தீயூஸ் 28 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கருணரத்னே 27 ரன்களில் வெளியேற, அசலங்கா விக்கெட்டை அஸ்வின் சாய்த்தார். இதன் பின்னர் மீண்டும் பந்துவீச வந்த ஜடேஜா, சுரஜ் லக்மல், எம்புல்தேனியா விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார்.

இன்னிங்ஸ் வெற்றி
இதனையடுத்து கடைசி விக்கெட்டை வீழ்த்தினால் ஒரே போட்டியில் 150 ரன்கள் மற்றும் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்ற உலக சாதனை படைக்க வாய்ப்பு என்ற நெருக்கடியில் ஜடேஜா பந்துவீசினார். முதல் இன்னிங்சில் சொதப்பிய திக்வெல்லா , 2வது இன்னிங்சில் அரைசதம் விளாசினார். எனினும் கடைசி விக்கெட்டை அஸ்வின் வீழ்த்த ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்களை வீழ்த்தி இந்தியா அசத்தியது.


Click it and Unblock the Notifications