மும்பை: கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது விக்கெட் கீப்பராக கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்ததை ஏற்காமல், இளம் வீரர் இஷான் கிஷன் திடீரென நாடு திரும்பினார். இதன்பின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட இஷான் கிஷனுக்கு இந்திய தேர்வுக் குழு அறிவுறுத்தியது.
ஆனால் இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்தார். ஐபிஎல் தொடர் இஷான் கிஷனுக்கு சரியாக அமையாத சூழலில், இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டதால், அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்று பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள துலீப் டிராபியில் விளையாட இஷான் கிஷன் தயாராகியுள்ளார். ஜார்க்கண்ட் மாநில அணிக்காக இஷான் கிஷன் துலீப் டிராபியில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஷான் கிஷனின் திடீர் மாற்றத்திற்கான காரணம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, இந்திய அணி தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவர் இஷான் கிஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தெரிய வந்துள்ளது. இளம் வீரரான இஷான் கிஷன், தேவையில்லாமல் பிசிசிஐ உடன் மோதலில் ஈடுபட்டால் சரியாக இருக்காது என்றும், கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய கட்டத்தில் இருக்கும் இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்றால் மீண்டும் வாய்ப்பு தேடி வராது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக் குழு நிர்வாகி கொடுத்த கவுன்சிலிங்கால் இஷான் கிஷன் மனம் திருந்தி துலீப் டிராபியில் விளையாட தயாராகியுள்ளார். ஏற்கனவே உத்தேச அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இஷான் கிஷனுக்கு இம்முறை கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 27 ஒருநாள் போட்டிகள், 32 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இஷான் கிஷன் விளையாடி இருக்கிறார்.
இதன் மூலமாக இஷான் கிஷன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேனுக்கான தேவை உள்ள நிலையில், இஷான் கிஷன் ஃபார்மை நிரூபிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு திரும்புவதோடு, பிசிசிஐ ஒப்பந்தமும் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.