மும்பை: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்க உள்ள முதல் சுற்றுப்பயணம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் ஓய்வு கொடுக்கலாம் என்று தேர்வு குழு முடிவு செய்தது. ஏனென்றால் செப்டம்பர் மாதம் முதல் ஹோம் சீசன் தொடங்கினால், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை ஓய்வு எடுக்க முடியாது.

ஆனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தரப்பில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கட்டாயம் விளையாட வேண்டும் என்று தேர்வுக் குழுவினரிடம் அறிவுறுத்தப்பட்டது. இதன்பின் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ரோஹித் சர்மா, ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகின. இதனால் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு பயணிக்கும் என்று பார்க்கப்பட்டது.
அதேபோல் விராட் கோலி மற்றும் பும்ரா இருவரும் விடுப்பு கேட்டுள்ளதாக கூறப்பட்டது. ஏனென்றால் விராட் கோலி தனது குழந்தைகளின் நலனுக்காக லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார். கிரிக்கெட் போட்டிகள் இருந்தால் மட்டுமே இனி விராட் கோலி இந்தியாவுக்கு வருவார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலியும் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவர்கள் இருவருமே இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடுவதை தேர்வுக் குழுவினரிடம் உறுதி செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் தீவிரமான முடிவே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்திய அணி மொத்தமாக 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது.
இதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வெடுக்கும் பட்சத்தில் இளம் வீரர்கள் அந்த இடத்தில் களமிறங்கக் கூடும். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அசத்தலாக செயல்பட்டு வரும் சூழலில், ஒருநாள் போட்டிகளிலும் அது தொடரக் கூடும். இதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதே சரியான முடிவாக பார்க்கப்படுகிறது.