மும்பை: டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று ஒரு மாதத்திற்கு மேலான சூழலிலும், அந்த வெற்றிக் கொண்டாட்டம் இன்னும் அடங்கவில்லை. கடைசி 5 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவை எப்படி கட்டுப்படுத்தி இந்திய அணி வென்றது என்று ரசிகர்கள் மீண்டும் மீண்டும் வீடியோவை பார்த்து வருகின்றனர். அதிலும் பும்ராவின் பவுலிங்கை பார்க்கும் ஒவ்வொரு மனிதரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஐசிசி ரிவ்யூ வீடியோவில் ரவி சாஸ்திரி பேசிய வார்த்தைகள் ட்ரெண்டாகி வருகிறது. அதில், இந்த டி20 உலகக்கோப்பையில் பும்ராவின் 2 செயல்பாடுகளை பார்த்து வியந்தேன் என்று சொல்ல வேண்டும். முதல் சம்பவம் என்னவென்றால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்தியது.

ஏனென்றால் 2வது ஸ்பெல்லின் முதல் பந்தில் ரிவர்ஸ் செய்து ரிஸ்வானின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். அங்கு தான் பாகிஸ்தான் தனது பிடியை ஆட்டத்தில் இழந்தது. மற்றொரு சம்பவம் இறுதிப்போட்டியில் நடந்தது. என்னதான் கிளாசன் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினால் என்றாலும், யான்சனின் விக்கெட்டை வீழ்த்தி பும்ரா அழுத்தத்தை கொடுத்தார்.
வாழ்வின் சில நேரங்களில் தான் நம் கையில் உள்ள பந்து என்ன சொன்னாலும் அதனை அப்படியே கேட்கும் என்று சொல்வார்கள். வாசிம் அக்ரம் மற்றும் வாக்கர் யூனுஸ் இருவரும் தங்களின் பவுலிங்கில் உச்சத்தில் இருந்த போது, அப்படிதான் பவுலிங் செய்தார்கள். அதேபோல் ஷேன் வார்னேவும் அப்படிதான். பிட்சாகி நேராக சென்று லெக் ஸ்டம்பை தகர்த்து செல்லும்.
இந்த டி20 உலகக்கோப்பையில் பும்ராவின் செயல்பாடுகள் அவர்களை போல் இருந்தது. பும்ராவை சொல்வதை பந்து அப்படியே கேட்டது. பும்ரா தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை டி20 உலகக்கோப்பையில் தொடரில் காட்டிவிட்டார். பந்தை தனது சொல்லுக்கு கட்டுப்படுத்திவிட்டார். இதுபோன்ற திறமைகளை பார்ப்பது எளிதான விஷயமல்ல என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களை அழைத்த கவுதம் கம்பீர், பும்ராவை மட்டும் அழைக்கவில்லை. இதன் மூலமாகவே பும்ராவின் திறமையை ரசிகர்கள் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். அவரின் திறமையை சரியான நேரத்தில் சரியான அணிக்கு எதிரான போட்டிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதால், பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.