கொழும்பு : 20 வயதே ஆன இலங்கை அணி சுழற் பந்துவீச்சாளர்
டுனித் வெல்லாலகே வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் 3 விக்கெட்களை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
அதுவும் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா என மூன்று முக்கிய விக்கெட்களை வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து அவர் சாய்த்தார். என்ன நடந்தது? யார் இந்த வெல்லாலகே?

இந்தியா பேட்டிங் : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். சென்ற போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய சுப்மன் கில், ரோஹித் சர்மா பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கினர்.
கில் விக்கெட் : சுப்மன் கில் நிதான ஆட்டம் ஆடி வந்தார். மறுபுறம் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி ரன் வேட்டையில் ஈடுபட்டார். இந்த நிலையில், சுப்மன் கில் 25 பந்துகள் சந்தித்து 19 ரன்கள் எடுத்து வெல்லாலகேவின் முதல் ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் அடுத்து வந்த கோலி 2 ரன்கள் சேர்த்தார்.
கோலி, ரோஹித் அவுட் : அடுத்து தன் இரண்டாவது ஓவரில் வெல்லாலகே 3 ரன்கள் சேர்த்து இருந்த கோலியை ஆட்டமிழக்கச் செய்தார். அந்த ஓவர் விக்கெட் மெய்டன் ஆனது. அடுத்து தன் மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மாவை வீழ்த்தினார்.
2 ரன் 3 விக்கெட் : இதன் மூலம் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித், சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் விக்கெட்களை அவர் வீழ்த்தினார்.
யார் இந்த வெல்லாலகே? : இந்தப் போட்டி நடைபெறும் கொழும்பு நகரை சேர்ந்தவர் தான் டுனித் வெல்லாலகே. 2003 ஆம் ஆண்டு பிறந்த இவர், சர்வதேச கிரிக்கெட்டில் 2022ஆம் ஆண்டில் தன் 19வது வயதில் ஆடத் துவங்கினார்.
ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும், 12 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி இருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டி அவரது 13வது ஒருநாள் போட்டி ஆகும். இதுவரை 16 விக்கெட்கள் வீழ்த்தி இலங்கை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார்.