கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி யாரும் எதிர்பார்க்காத வகையில் டை-யில் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் இளம் வீரர் வெல்லாலகே 65 பந்துகளில் 67 ரன்களை சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
அதன்பின் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.5 ஓவர்களுக்கு 230 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. கடைசி 14 பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற சூழலில் இருந்த போது, அர்ஷ்தீப் சிங் தேவையின்றி பெரிய ஷாட்டிற்கு முயற்சித்து விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் ஆட்டம் டை-யில் முடிந்தது.

இந்த போட்டியில் யாரும் வெற்றி பெறவில்லை என்றாலும், இலங்கை அணி ரசிகர்கள் உற்சாகமாகினர். மைதானத்திலேயே அந்த அணி ரசிகர்கள் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் வீரர்களின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு கத்துக்குட்டி அணியிடம் இப்படியா ஆல் அவுட்டாவது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேட்டிங் வரிசையில் செய்த மாற்றங்களே காரணமாக அமைந்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததும், விராட் கோலி களத்தில் இருந்த போது திடீரென வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார். அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் வந்திருக்க வேண்டும்.
கம்பீர் எப்போதும் இடதுகை - வலதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். இதனால் நம்பர் 4ல் வாஷிங்டன் சுந்தரை களமிறக்கினார் கம்பீர். ஆனால் கம்பீர் திட்டத்தை இலங்கை அணி வீரர்கள் எளிதாக முறியடித்தனர். வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கீழ் வரிசை வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டது.
வழக்கமாக கீழ் வரிசையில் சிறப்பாக ஆடக் கூடிய பேட்ஸ்மேனான வாஷிங்டன் சுந்தரை தேவையில்லாமல் நம்பர் 4ல் களமிறக்கி மோசமான திட்டத்தை செயல்படுத்தி தோல்வியடைந்தார். இதனால் கம்பீர் இன்னும் கொஞ்சம் போட்டியை கணித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.