கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் எந்த அணிக்கும் வெற்றி இல்லாமல் டை-யில் முடிந்தது. இலங்கை அணி நிர்ணயித்த 231 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் இந்திய அணி கடைசி நேரத்தில் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் இலங்கை ரசிகர்கள் பலரும் இந்திய ரசிகர்களை கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். அதேபோல் கம்பீரின் திட்டத்திற்கு சீனியர் வீரர்கள் மாறுவதற்கு இன்னும் சில காலம் எடுக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களை வேலை வாங்கியது போல் ஒருநாள் கிரிக்கெட்டில் கம்பீரால் செயல்பட முடியாது என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஏனென்றால் தோனியை போலவே கவுதம் கம்பீரும் இடதுகை - வலதுகை பேட்ஸ்மேன் இருக்கும் வகையில் பேட்டிங் வரிசையை கட்டமைக்க விரும்புபவர். கேகேஆர் அணியின் பேட்டிங்கை அப்படிதான் கட்டமைத்து வந்துள்ளார். ஆனால் இந்திய ஒருநாள் அணியில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மூவருமே வலதுகை ஆட்டக்காரர்கள் தான். அவர்களின் பேட்டிங் வரிசையை மாற்ற முடியாது.
இதனால் நம்பர் 4ல் இடதுகை பேட்ஸ்மேன் விளையாட வேண்டும் என்பதில் கம்பீர் தீவிரமாக உள்ளார். இதன் காரணமாக நேற்றைய ஆட்டத்தில் திடீரென இடதுகை பேட்ஸ்மேனான வாஷிங்டன் சுந்தரை கம்பீர் அனுப்பி வைத்தார். அது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் 2வது ஒருநாள் போட்டியில் இடதுகை பேட்ஸ்மேனை அணிக்குள் கொண்டு வருவதில் கம்பீர் தீவிரமாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் இருக்கும் இடதுகை பேட்ஸ்மேன் என்றால் அது ரிஷப் பண்ட் மட்டும் தான். இதனால் நம்பர் 4 வரிசையில் விளையாட ரிஷப் பண்ட்-ஐ பிளேயிங் லெவனில் விளையாட வைக்கும் முடிவுக்கும் கம்பீர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் கேஎல் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இருவரில் ஒருவர் 2வது ஒருநாள் போட்டியில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
லக்னோ அணியின் ஆலோசகராக கம்பீர் பணியாற்றிய போது கேஎல் ராகுலுடன், கேகேஆர் மற்றும் டெல்லி அணியுடன் பணியாற்றிய போது ஸ்ரேயாஸ் ஐயருடனும் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். இதனால் கம்பீர் யாரை அடுத்த போட்டியில் பெஞ்ச் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.