கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேபோல் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் ஓய்வில் இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் கம்பீரின் கோரிக்கையால் இலங்கை ஒருநாள் தொடரை விளையாட உள்ளனர். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்டோரும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முதல் அடியாக இந்த டி20 தொடர் உள்ளது.

அதேபோல் ரோஹித் சர்மா - கவுதம் கம்பீர் கூட்டணி எப்படி செயல்படுகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், டி20 உலகக்கோப்பைக்கு பின் நீண்ட ஓய்வில் இருந்தது மகிழ்ச்சியை கொடுத்தது. இன்றும் மும்பை மற்றும் டெல்லியில் கிடைத்த வரவேற்பை மறக்க முடியவில்லை.
ஆனால் அடுத்த பயணத்தை தொடங்க வேண்டும். கடந்த கால வெற்றிகள், குறிப்பிட்ட காலத்திற்கு தான் மகிழ்ச்சியாக இருக்கும். அதில் இருந்து அடுத்தடுத்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கவுதம் கம்பீரிடம் ஏராளமான அனுபவம் உள்ளது. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பணியாற்றி இருக்கிறார். நிச்சயம் பழைய பயிற்சியாளர்கள் குழுவை காட்டிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
ஏனென்றால் ரவி சாஸ்திரிக்கு ராகுல் டிராவிட் அந்த பொறுப்புக்கு வந்தார். தற்போது ராகுல் டிராவிட்டுக்கு பின் கம்பீர் வந்துள்ளார். ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு மாதிரி பணியாற்றுவார்கள். கம்பீருடன் சில ஆலோசனைகள் நடத்த முடிந்தது. அவரை நீண்ட ஆண்டுகளாக அறிவேன். நாங்கள் இருவரும் சில முறை இணைந்து விளையாடி இருக்கிறோம். இந்திய அணியிடம் இருந்து என்ன தேவை என்பதில் தெளிவுடன் இருக்கிறார்.
இந்திய அணியின் தேவையை சுற்றியே எங்களின் பேச்சுகள் உள்ளது. அதேபோல் எதிர்காலத்தை பற்றி அதிகமாக திட்டமிட தேவையில்லை என்பதை உணர்ந்துள்ளோம். ஏனென்றால் 3 போட்டிகளில் விளையாடுவதற்காக வந்துள்ளோம். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி பயணிக்க வேண்டிய பாதையையும், இலக்கையும் நோக்கிய பயணத்தை தொடங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.