கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்பு மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர்களான விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் கம்பேக் கொடுக்கவுள்ளனர். இந்த அணி முழு பலத்துடன் இலங்கை அணியை எதிர்கொள்வது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஏனென்றால் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியதன் காரணமாக கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக பொறுப்பேற்க வைத்தனர். தற்போது ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்திருப்பதால், யாருக்கு முதல் சான்ஸ் கொடுக்கப்படும் என்ற கேள்வி உள்ளது.

இதுகுறித்து ரோகித் சர்மா பேசுகையில், ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரில் ஒருவரை தேர்வு செய்வது சவாலானது. ஏனென்றால் இருவருமே இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னர்கள். ஆனால் இது மகிழ்ச்சியான சவால் தான். இதுபோன்ற சவால்களை அதிகம் எதிர்கொள்ள விரும்புகிறேன். இந்த கேள்விக்கான பதில் நாளை அனைவருக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கம்பீர் உடன் ஓய்வறையில் இருப்பது எப்படியான அனுபவமாக உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோஹித் சர்மா, கவுதம் கம்பீருடன் ஓய்வறையில் இருக்கும் போது, அவர் ஏராளமான விஷயங்கள் செய்து எங்களை சிரிக்க வைக்கிறேன். எப்போதும் யாரின் சொந்த வாழ்க்கை மற்றும் குணாதிசியங்கள் பக்கம் கவனம் கொடுக்காதீர்கள்.
கம்பீர் சிரிப்பாரா, மாட்டாரா என்பதெல்லாம் தேவையில்லாத விஷயமாக நினைக்கிறேன். ஏனென்றால் உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமானவர்கள். சில நேரம் நாம் அதிகமாக சிரிக்கும் போது மற்றவர்களுக்கு பிடிக்காது. ஒவ்வொருவருக்கும் எது பிடிக்கும், எது பிடிக்காது என்று ஒரு பார்வை இருக்கும். அதனால் அதற்கு கவனம் கொடுக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் உடன் ரோஹித் சர்மாவுக்கு மிகச்சிறந்த நட்பு இருந்த நிலையில், தற்போது அந்த இடத்திற்கு கம்பீர் வந்துள்ளார். இதனால் ரோஹித் சர்மா - கம்பீர் இடையிலான புரிதல் இந்திய அணிக்கு பயனளிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.