IND vs SL: இந்த வீரர் மட்டும் இருந்திருந்தால், 5வது நாளில் இந்தியா வென்று இருக்கும்.. தமிழக வீரர் கருத்து
கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடி இருந்தால், இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றிருக்கும் என்று முன்னாள் இந்திய தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முழங்கால் காயம் காரணமாக பும்ரா இந்தத் தொடரிலிருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய போதிலும், டிராவில் முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை முழுமையாகக் கைப்பற்றும் பொன்னான வாய்ப்பை இந்தியா தவறவிட்டது.

இது குறித்து பேசிய அவர், "இலங்கை அணியின் 8 முதல் 11 வது வரிசை பேட்ஸ்மேன்கள் 292 பந்துகளை எதிர்கொண்டு விளையாடியுள்ளனர். சோனல் தினுஷா ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன், அவரை விட்டுவிடுவோம். ஆனால் மற்ற கீழ்வரிசை பேட்ஸ்மேன்களை உங்களால் ஏன் ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை?"
"இது ஒன்றே இந்திய அணி எவ்வளவு மோசமாக பந்துவீசியது என்பதைக் காட்டுகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே பும்ராவின் பங்களிப்பை இந்தியா நிச்சயம் இழக்கும் என்று நான் கூறினேன். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பும்ரா இருந்திருந்தால், அவர் நிச்சயமாக இலங்கையின் கீழ்வரிசை வீரர்களை எளிதாக வீழ்த்தியிருப்பார்" என்றார்.
"ஐந்தாம் நாளில் வெறும் 4 விக்கெட்டுகளே தேவைப்பட்ட நிலையில், தொடரை முழுமையாகக் வெல்லும் வாய்ப்பை இந்தியா வீணடித்துள்ளது. 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது கூட இந்திய அணிக்கு ஏமாற்றமே, ஏனெனில் இந்தத் தொடர் நிச்சயம் 2-0 என முடிந்திருக்க வேண்டும். சோனல் தினுஷா நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஆனால் மற்ற மூன்று கீழ்வரிசை பேட்ஸ்மேன்களைக் கூட இந்தியாவால் அவுட் செய்ய முடியவில்லை என்பது ஒரு தரமற்ற பந்துவீச்சு செயல்பாட்டையே காட்டுகிறது" என்று தெரிவித்தார்.
இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்தியா, இலங்கைக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தது. இருப்பினும், இலங்கைக்கு எதிராக ஃபாலோ-ஆன் கொடுத்த போதிலும் இந்தியாவின் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது இதுவே முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications

