கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருப்பதால், ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது.

பவர் பிளே ஓவர்களில் இலங்கை அணியை ரோகித் சர்மா - சுப்மன் கில் இருவரும் வெளுத்து கட்டினர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இளம் சுழற்பந்துவீச்சாளர் வெல்லாலகே வீசிய முதல் பந்திலேயே சுப்மன் கில் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த விராட் கோலி மீண்டும் வெல்லாலகே பந்தில் வெறும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ரோகித் சர்மாவும் 53 ரன்களில் வெளியேறினார்.
இதனால் 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. பின்னர் இஷான் கிஷன் - கேஎல் ராகுல் இணைந்து சிறிது நேரம் போராடினர். 4வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 63 ரன்கள் சேர்த்தனர். கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வெல்லாலகே பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து இலங்கை அணியின் அசலங்கா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அங்கு தொடங்கிய சரிவு கடைசி வரை நிற்கவே இல்லை.
தொடர்ந்து இஷான் கிஷன் 33 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களிலும், ஜடேஜா 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த பும்ரா 5 ரன்களிலும் குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 186 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கடைசி விக்கெட்டில் அக்சர் படேல் ரன் குவிக்க போராடினார். இறுதியாக அக்சர் படேல் 26 ரன்கள் சேர்த்தால், இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இலங்கை அணி தரப்பில் வெல்லாலலே 5 விக்கெட்டுகளையும், அசலங்கா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.