மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 2016ஆம் ஆண்டு தோனியின் கேப்டன்சியில் அறிமுகமானார். அதன்பின் விராட் கோலி கேப்டன்சியில் டெஸ்ட் வீரராக முன்னேற்றம் கண்ட பும்ரா, நட்சத்திர பவுலர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதன்பின் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் விளையாடிய பும்ரா, தற்போது ஜாம்பவான் என்ற பெயரை ரசிகர்களிடையே சம்பாதித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த டி20 மற்றும் டெஸ்ட் பவுலர் என்று பும்ராவை வெளிநாட்டு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களே பும்ரா நாங்கள் ஆடிய காலத்தில் இருந்திருந்தால், புதிய பந்தில் அவர் தான் தொடங்கி இருப்பார் என்று பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பும்ரா கலந்து கொண்டார். அப்போது பும்ராவிடம், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூவரில் பிடித்த கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பும்ரா, என்னுடைய பார்வையில் எனக்கு பிடித்த கேப்டன் யாரென்றால் அது நான் தான். ஏனென்றால் நானும் சில போட்டிகளில் கேப்டனாக விளையாடி இருக்கிறேன். என்னைவிட சிறந்த கேப்டன்கள் இருந்தாலும், எனக்கு நான் தான் ஃபேவரைட் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, தோனியின் தலைமையில் விளையாடிய போது பாதுகாப்பாக உணர்ந்தேன். இதன்பின் விராட் கோலியின் தலைமையில் கீழ் விளையாடிய போது, ஃபிட்னஸ் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன். அதேபோல் ரோஹித் சர்மாவின் கேப்டன் கொஞ்சம் வித்தியாசமானது. ஏனென்றால் இளம் வீரர்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து, அவர்களின் இடத்தை தன்னை பொருத்தி பார்ப்பார் ரோஹித் சர்மா.
அதேபோல் தவறுகளில் இருந்து தான் அதிகம் கற்றுக் கொள்வார். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரின் கருத்தையும் கேட்டுக் கொண்டு, தேவையானவற்றை செயல்படுத்துவார். அவர் கேப்டன்சியின் கீழ் நீண்ட காலம் விளையாடியது எனக்கு பெருமையான விஷயம். அண்மையில் முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, ஏராளமான இளம் வீரர்கள் அணிக்கு வந்தனர்.
அப்போது சூழலை எளிதாக்குவதற்காக இளம் வீரர்களுடன் ரோஹித் சர்மா வெளியில் அதிகம் சென்று நேரம் செலவிட்டார். அவர்களும் இந்திய அணியின் முக்கிய அங்கம் என்பதை புரிய வைத்தார். ஜூனியர், சீனியர் என்ற பாரபட்சம் இந்திய அணியில் கிடையாது என்று அனைவருக்கும் எடுத்துரைத்தார். அதனால் மூன்று கேப்டன்களும் இந்திய அணியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்றவர்கள் என்று தெரிவித்தார்.