கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. டி20 உலகக்கோப்பையை வென்ற ஒரே மாதத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரில் தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, அக்சர் படேல், கேஎல் ராகுல், சிராஜ், குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் இருந்த போதும் இந்திய அணி ஒருநாள் தொடரில் தோல்வியடைந்தது எப்படி என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

இந்த 3 போட்டிகளில் இந்திய அணியின் 27 விக்கெட்டுகள் இலங்கை அணியின் ஸ்பின்னர்களால் வீழ்த்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள சிரமங்களை சந்திப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து இந்திய ஜாம்பவான் வாசிம் ஜாபர் தனது எக்ஸ் பக்கத்தில், இலங்கை அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடி இருக்கிறது.
அதனால் ஒருநாள் தொடரை வெல்வதற்கு இலங்கை அணி தகுதியானது. இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்திருப்பது எனக்கு எந்த கவலையையும் அளிக்கவில்லை. ஏனென்றால் வெற்றியும், தோல்வியும் விளையாட்டின் ஒரு அங்கம் தான். ஆனால் எனது கவலை, சாம்பியன்ஸ் டிராபி தொடரை நினைத்து தான்.
ஏனென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடவுள்ளது என்று பதிவிட்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை தயார் செய்யும் வகையில் தான் இந்த ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் விளையாட அழைக்கப்பட்டனர்.
புதிய பயிற்சியாளர் கம்பீர் அதற்கான திட்டத்தை செயல்படுத்தினார். ஆனால் அந்த திட்டம் தோல்வியை சந்தித்திருக்கும் சூழலில், இந்திய அணி தயாராகுவதற்கு இன்னும் 3 போட்டிகள் மட்டுமே உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தான் மைதானங்கள் எப்படி செயல்படும் என்று இந்திய வீரர்களுக்கு தெரியாது.
அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் மைதானங்களில் இந்திய அணி யாருமே விளையாடியதில்லை. இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, தற்போது ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தடுமாறுவதும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராக போதுமான கால அவகாசம் இல்லாததும் இந்திய ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.