கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ 102 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதன்பின் 249 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் கேப்டன் ரோகித் சர்மா 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 53 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன்பின் விராட் கோலி - ரிஷப் பண்ட் கூட்டணி களத்தில் இருந்தது. கடந்த 2 போட்டிகளாக நம்பர் 4 பேட்டிங் வரிசையில் ஆல்ரவுண்டர்களை களமிறக்கி கம்பீர் சோதனை முயற்சிகளை செய்து தோல்வியடைந்தார். இம்முறை குட்டி கோலியான கேஎல் ராகுலை நீக்கிவிட்டு, அவரது இடத்திற்கு ரிஷப் பண்ட்-ஐ கொண்டு வந்தார்.
இதனால் நம்பர் 4ல் களமிறங்கி ரிஷப் பண்ட் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவர் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க, சரவெடி ஆட்டம் இருக்கிறது என்று ரசிகர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆனால் தீக்சனா வீசிய ஸ்பின்னில் ஏமாற்றப்பட்ட ரிஷப் பண்ட், வெறும் 6 ரன்களுக்கு ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 63 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுலை 2வது ஒருநாள் போட்டியில் நம்பர் 6 பேட்ஸ்மேனாக மாற்றி கம்பீர் சோதனை செய்தார். அதில் கேஎல் ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார். தற்போது கேஎல் ராகுலை நீக்கிவிட்டு அவரது இடத்திற்கு ரிஷப் பண்ட்-ஐ கம்பீர் கொண்டு வந்த நிலையில், அவரும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றியுள்ளார்.
ரிஷப் பண்ட் நீண்ட நாட்களுக்கு பின் ஒருநாள் கிரிக்கெட் பக்கம் திரும்பி இருந்தாலும், கேஎல் ராகுலை நீக்கயது தேவையில்லாத நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2 ஆண்டுகளில் நம்பர் 5 பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் அடித்த ரன்களை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.