கொழும்பு : இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை கொழும்பு நகரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி டையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி அபாரமாக வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் இந்திய அணியில் தோல்விக்கு நடுவரிசை வீரர்கள் பேட்டிங்கில் சொதப்புவதே காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ரோகித் சர்மாவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தடுமாறுவதால் தான் இந்தியா தோல்வியை சந்தித்து வருகிறது.

குறிப்பாக பயிற்சியாளர் கம்பீர் தேவை இல்லாமல் பேட்டிங் வரிசையை மாற்றி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். உலகக்கோப்பை அணியில் பேட்டிங் வரிசையில் கே எல் ராகுல் நான்காவது இடத்திலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஐந்தாவது இடத்திலும் களம் இறங்குவார்கள். ஆனால் கம்பீர் தேவை இல்லாமல் பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரில் அக்சர் பட்டேலையும், சிவம் துபேவையும் பேட்டிங் வரிசையில் முன்பே அனுப்புகிறார்.
இதனால் பேட்டிங் வரிசையில் குழப்பம் ஏற்பட்டு இந்திய வீரர்கள் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் வலது கை பேட்ஸ்மேன், இடது கை பேட்ஸ்மேன் காம்பினேஷன் வேண்டும் என்பதற்காக தான் கம்பீர் இந்த வேலையை செய்கிறார் என்றால் இந்திய அணியில் ஏற்கனவே இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் கம்பீர ஏன் இந்த முட்டாள்தனத்தை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனால் விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்டை அணிக்குள் சேர்த்து கே எல் ராகுலை அணியை விட்டு நீக்குவது சரியான முடிவாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கம்பீரும் இதே போல ஒரு முடிவை தான் எடுக்க தயாராக இருக்கிறார். ஸ்ரேயாஸ், கே எல் ராகுல் என இருவருமே இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தடுமாறி இருக்கிறார்கள்.
இதனால் இருவரையும் பெஞ்சில் அமர வைத்துவிட்டு ரிஷப் பன்ட் மற்றும் ரியான் பராக் இருவரையும் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. அது கூடுதல் பலமாக இந்தியாவுக்கு இருக்கும். மேலும் அவர் பினிஷிங் ரோலையும் பார்த்துக் கொள்வார். ரியான் பராக் ஸ்பின் பவுலிங் வீசுவார் என்பதால் இந்திய அணிக்கு சிக்கல் இருக்காது.