மும்பை : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி இம்மாதம் இறுதியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் பலரும் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிற்பாதியில் பல கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் மூத்த வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காக இலங்கை தொடரில் அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை.

இதனால் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தான் கேப்டன் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ள நிலையில், இலங்கை எதிரான தொடரில் ரோகித் பங்கேற்க மாட்டேன் என கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு பதில் ஹர்திக் பாண்டியா அல்லது கே.எல். ராகுல் என இரண்டு பேரில் கேப்டன் பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக ஏற்கனவே இருந்த நிலையில் அவருடைய கேப்டன்ஷி திறன் ஐபிஎல் தொடரில் கேள்விக்குறியானது. மும்பை அணியின் கேப்டனாக அவர் படுமோசமாக செயல்பட்டார். இதனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோன்று கே எல் ராகுல் தான் ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் இந்திய அணிக்காக கேப்டன்ஷி பதவியை ஏற்றுக்கொண்டார்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரிலும் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி அபாரமாக செயல்பட்டது. அது மட்டுமில்லாமல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் வரப் போகிறார் என கருதப்படுகிறது. கௌதம் கம்பீர், கே எல் ராகுலின் உற்ற நண்பராக இருக்கிறார்.
இருவரும் லக்னோ அணிக்காக இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் ரோகித் சர்மா இல்லாத பட்சத்தில் கௌதம் கம்பீர் கே எல் ராகுலையே கேப்டனாக செயல்பட வாய்ப்பு கொடுப்பார் என தெரிகிறது. இதனால் இலங்கைத் தொடரில் ராகுல் தான் கேப்டனாக இருக்க போகிறார். ஐபிஎல் தொடருக்கு பிறகு கே எல் ராகுல் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.