மும்பை: இந்திய அணி சமீபத்தில் பங்கேற்ற இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு தோல்விகள் மற்றும் ஒரு டை-ஐ சந்தித்தது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இதுவே மிக மோசமான ஒரு நாள் தொடராகவும் அமைந்தது.
பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எடுத்த சில முடிவுகள் மோசமாக அமைந்தது தான் இந்த தோல்விக்கு காரணம் என விமர்சகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். ரோஹித் சர்மா இலங்கை ஒருநாள் தொடருக்கு முன்னதாக கேப்டனாக 45 ஒருநாள் போட்டிகளில் 34 வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருந்தார். 10 தோல்விகளை மட்டுமே சந்தித்து இருந்தார்.

தற்போது இலங்கை தொடரின் மூன்று போட்டிகளில் வெற்றி கிடைக்காத நிலையில் அவர் 48 போட்டிகளில் 34 வெற்றிகள், 12 தோல்விகள், ஒரு டை ஆகியவற்றை சந்தித்துள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அடிப்படை திட்டத்தையே கவுதம் கம்பீர் மாற்றியது தான் முக்கிய தவறாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக பேட்டிங் வரிசையில் இடது கை - வலது கை பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பேட்டிங் வரிசை ஒவ்வொரு போட்டியிலும் மாற்றப்பட்டது. அடுத்து பவுலிங்கில் முழுநேர பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பாமல் அதிக பகுதி நேர பந்து வீச்சாளர்களும் பந்து வீச வேண்டும் என கம்பீர் பிடிவாதமாக இருக்கிறார்.
இதை படிப்படியாக முயற்சி செய்து பார்க்காமல், ஒரே தொடரிலேயே ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு பேட்ஸ்மேன்களை பகுதி நேர பந்து வீச்சாளர்களாக பயன்படுத்தி சொதப்பி விட்டார் கம்பீர். ஒரு நாள் அணியில் இந்த சொதப்பல்கள் நடந்த அதே சமயம், டி20 தொடரில் இந்திய அணி 3 - 0 என வெற்றி பெற்று இருக்கிறது.
டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவிற்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் சரியான புரிதல் உள்ளது. கிட்டத்தட்ட ஒரு நாள் தொடரில் செய்யப்பட்ட அதே விஷயங்கள் தான் டி20 தொடரிலும் செய்யப்பட்டன. அவை அந்தத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவின. இதில் தான் சிக்கல் உள்ளது. டி20 போட்டிகளும், ஒருநாள் போட்டிகளும் ஒரே மாதிரி இருக்காது என்பதை கம்பீர் புரிந்து கொள்ளவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கவுதம் கம்பீர் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடினார். ஐபிஎல் அணிகளுக்கு மட்டுமே ஆலோசகராகவும் இருந்துள்ளார். அதன் மூலம், அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டி20 போட்டி சூழ்நிலைகளை மட்டுமே அருகில் இருந்து கவனித்து இருக்கிறார். அதன் காரணமாக அவரது அணுகுமுறை முற்றிலும் டி20 அணிக்கு உதவிகரமாக இருந்தது.
ஆனால், ஒரு நாள் போட்டிகளை பொருத்தவரை அவரது அதிரடியான அணுகுமுறை வேலை செய்யவில்லை. அதன் காரணமாகவே, இந்திய அணி இலங்கை தொடரில் பின்னடைவை சந்தித்தது. இன்னும் ஆறு மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது அதில் இந்தியா கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. ஆனால், கவுதம் கம்பீரின் இந்த அணுகுமுறை ஒரு நாள் போட்டிக்கு ஒத்து வராது.
இந்த நிலையில், ரோஹித் சர்மா என்ன செய்வது என புரியாத நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களிலும் கம்பீர் டி20 அணுகுமுறையை செயல்படுத்தினால் நிச்சயம் ரோஹித் சர்மா மற்றும் கம்பீருக்கு இடையே விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.