கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியை கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்த போது பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நேற்று இரவு 12 மணிக்குதான் முடிவுக்கு வந்தது. அப்போதிருந்து 15 மணி நேர இடைவெளியில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக களமிறங்க வேண்டும் என்பதால் பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்து மாற்று வீரர்களை ரோஹித் ஆட வைக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறி வந்தனர்.

ஆனால், ரோஹித் சர்மா அறிவித்த இந்திய அணியில் ஷர்துல் தாக்குர் தவிர்த்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய மற்ற அனைவரும் இடம் பெற்றனர். பும்ரா, ராகுல் என சமீபத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்த வீரர்களும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றனர். தாக்குருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியில் இடம் பெற்றார்.
இதன் பின்னணியில் இந்திய அணி உலகக்கோப்பைக்கான திட்டத்தை வைத்திருக்கலாம். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 228 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை அப்படியே தக்க வைத்துக் கொண்டால், அதாவது இடையே தோல்வி ஏதும் அடையாமல் ஆசிய கோப்பையை நிறைவு செய்தால் அது இந்திய அணி வீரர்களுக்கு உலகக்கோப்பை தொடருக்கு பெரிய ஊக்கமாக இருக்கும்.
மேலும், ஒரே ஒரு வீரரை மட்டும் மாற்றி வெற்றி பெற்ற அணியை அப்படியே ஆட வைப்பதன் மூலம், வீரர்கள் இடையே புரிதல் அதிகம் ஆகும். அது களத்திலும் வெளிப்படும். மன ரீதியான இந்த அணுகுமுறையை தான் இந்திய அணி பின்பற்றுகிறது.
இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணி விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்