கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். 2024ஆம் ஆண்டு இந்திய அணி விளையாடும் முதல் ஒருநாள் போட்டி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதேபோல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரியான் பராக் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சியளிக்கும் வகையில் சிவம் துபே களமிறங்கினார். சுமார் 1,692 நாட்களுக்கு பின் சிவம் துபே இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டு சென்னையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.

அறிமுகப் போட்டிக்கு பின் சிவம் துபே களமிறங்கியுள்ள 2வது ஒருநாள் போட்டி இதுவாகும். இதனிடையே சிவம் துபேவை பிளேயிங் லெவனில் சேர்த்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா அளவிற்கு சிவம் துபேவின் வேகப்பந்துவீச்சில் வேகம் இருக்காது. மணிக்கு 125 முதல் 130 கிமீ வேகத்தில் தான் பவுலிங் செய்வார்.
இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக சிவம் துபேவை பார்ப்பதே தவறான ஒன்றாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9வது வீசுவதற்காக சிவம் துபே அழைக்கப்பட்டார். முதல் 2 ஓவர்களில் சிறிது கன்ட்ரோல் மிஸ்ஸான நிலையில், 3வது ஓவரின் முதல் பந்திலேயே சிவம் துபே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
கூடுதல் வேகத்துடன் சரியான லெந்தில் பிட்ச் செய்து சிவம் துபே இன்ஸ்விங் செய்ய, சற்றும் எதிர்பார்க்காத குசால் மெண்டிஸ் எல்பிடபிள்யூ ஆனார். இதனால் இந்திய வீரர்கள் நடுவரிடம் அவுட் என்று அப்பீல், பின்னர் அவுட் கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை சிவம் துபே வீழ்த்தி அசத்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட் வீரராகவே பார்க்கப்பட்டு வந்த சிவம் துபே, தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் செயல்பட தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு ரஞ்சி சீசனில் மும்பை அணிக்காக சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் சிவம் துபே. இந்த அனுபவத்தை வெளிப்படுத்தி ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிவம் துபே ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.