கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டில் முதல்முறையாக இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றுள்ள நிலையில், சீனியர் வீரர்கள் பலரும் இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி கட்டமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இடதுகை - வலதுகை பேட்ஸ்மேன்களின் கூட்டணியில் தான் இந்திய அணி களமிறங்க வேண்டும் என்பதில் கம்பீர் தீவிரமாக இருந்தார். அது இந்திய அணிக்கு சாதகமாகவும் அமைந்தது.

அதேபோல் கூடுதலாக ஆல்ரவுண்டருக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் தீவிரமாக இருந்தார். ஆனால் ஒருநாள் தொடரை பொறுத்தவரை ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகிய டாப் 3 பேட்ஸ்மேன்களும் வலதுகை ஆட்டக்காரர்கள் தான். இவர்களை இந்திய அணியில் இருந்து பெஞ்ச் செய்ய முடியாது என்பதால், நம்பர் 4ல் ரிஷப் பண்டை களமிறங்க கம்பீர் முயற்சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
உலகக்கோப்பைத் தொடரில் நம்பர் 4 வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர், நம்பர் 5ல் கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஸ்ரேயாஸ் ஐயர் - கம்பீர் இடையிலான நட்பு நன்றாக இருந்தாலும், ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு உடனடியாக வாய்ப்பு கிடைப்பது அரிதான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இதனால் நம்பர் 4ல் இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டு, நம்பர் 5ல் கேஎல் ராகுலுக்கு இடம் கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் டி20 கிரிக்கெட்டில் ரியான் பராக்கின் ஆட்டம் பலரையும் ஈர்த்துள்ளதால், ஹர்திக் பாண்டியா இடத்தில் ரியான் பராக்கை களமிறக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சிவம் துபே இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா இருவரின் கைகளில் தான் முடிவுகள் உள்ளது. ஏனென்றால் கொழும்பு பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதோடு, இந்த பிட்சில் சராசரி ஸ்கோரே 270 ரன்களாக உள்ளது. இதனால் ஸ்பின்னர்களை துவம்சம் செய்யக் கூடிய வீரரை பிளேயிங் லெவனில் சேர்ப்பது இந்திய அணிக்கு சாதகமாக அமையக் கூடும்.