மும்பை : இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கௌதம் கம்பீர் பயிற்சியாளராக தலைமையேற்றுள்ள நிலையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும். இந்த சூழலில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள் என நினைக்கப்பட்டது.
இந்த நிலையில் இருவரும் ஒரு நாள் அணியில் திரும்பி இருக்கிறார்கள். இந்த சூழலில் இந்திய அணியின் மிகப்பெரிய மைனசாக ஒரு நாள் கிரிக்கெட்டில் பொறுத்த வரை போதுமான பினிஷர் இல்லாதது தான் என்று பார்க்கப்பட்டது. தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு இந்திய ஒரு நாள் அணியில் பினிஷரே இல்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருந்தது.

இந்த நிலையில் தான் ரிங்கு சிங் ஐபிஎல் தொடர் மூலம் தன்னுடைய திறமையை நிரூபித்து இந்திய ஒரு நாள் அணியில் இடம் பிடித்தார். இதனால் தோனி ரெய்னாவுக்கு பிறகு சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்கள் நம்பினர். கடைசியாக இந்திய அணி விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கூட ரிங்கு சிங் 27 பந்துகளை எதிர் கொண்டு 38 ரன்கள் சேர்த்தார்.
இதில் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என ஸ்ட்ரைக் ரேட் 140 என்ற அளவில் இருந்தது. 26 வயதான ரிங்கு சிங் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி 55 ரன்கள் சேர்த்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 20 போட்டிகள் விளையாடி 416 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் பினிஷர் வாய்ப்பு ரிங்கு சிங்கிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தோனியின் இடத்தில் வேறு யாரு தான் பினிஷராக கம்பீர் சேர்க்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ரிஷப் பந்த், சிவம் துபே ஆகியோர் இருக்கிறார்கள். இதில் விக்கெட் கீப்பர் பணியை ரிஷப் பண்ட் பார்த்தால் அவர்தான் பேட்டிங் வரிசையில் நம்பர் ஆறாவது இடத்தில் களமிறங்குவார். இதன் மூலம் இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்டை தான் தோனியின் இடத்தில் வைத்து பார்க்க போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.