கொழும்பு: இந்திய அணியை விடவும் இலங்கை அணி சிறந்த கிரிக்கெட் விளையாடியதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியால் கவலைப்பட தேவையில்லை என்று கூறிய ரோஹித் சர்மா, ஸ்பின்னர்களை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கான திட்டத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 27 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை அணி புதிய வரலாறு படைத்துள்ளது. டி20 தொடரை வென்ற இந்திய அணியை வீழ்த்தி, இலங்கை அணி பதிலடி கொடுத்துள்ளது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், ஸ்பின்னர்களை எதிர்கொள்வது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன். இந்த விவகாரத்தை ஒவ்வொரு வீரரும் தனித்தனியே சிந்தித்து, தங்களுக்கேற்ற ஆட்ட நுணுக்கங்களுடன் விளையாட வேண்டும். இந்திய அணிக்காக விளையாடும் போது ஒரு போதும் உங்களால் மனநிறைவு கொள்ள முடியாது. இதனை ஜோக்கிற்காக சொல்லவில்லை. அதுதான் உண்மை.
நான் கேப்டனாக இருக்கும் போது நிச்சயம் வீரர்கள் மனநிறைவு அடைய முடியாது. ஆனால் சிறந்த கிரிக்கெட்டை ஆடியவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். எங்களை விடவும் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது. நாங்கள் பிட்சை பார்த்து, அதற்கேற்றபடி காம்பினேஷனை உருவாக்கினோம். அதேபோல் சிலர் இந்த தொடரில் கவனம் ஈர்த்துள்ளார்கள். சிலர் மாற்றங்களை செய்ய வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
சில விஷயங்கள் பாசிட்வாக அமைந்துள்ளது. அடுத்த முறை வரும் போது இதுபோன்ற பிட்ச்களுக்கு தயாராக வர வேண்டும். சில நேரங்களில் தோல்வியும் வரும். இந்த தோல்வியால் உலகம் ஒன்றும் முடிந்துவிடப் போவதில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில நேரங்களில் தொடரை இழப்போம். ஆனால் அந்த தோல்விக்கு பின் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.