கொழும்பு: இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் வென்றதோடு 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின் களமிறங்கிய இலங்கை அணிக்கு நிசாங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே இருவரும் ரன்கள் குவிப்பில் தீவிரமாக இருந்த நிலையில், இலங்கை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், நிசாங்கா 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டத்தின் கட்டுப்பாட்டை எடுத்து கொண்டார். தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசிய அவர், 65 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக 30 ஓவர்களில் இலங்கை அணி 121 ரன்களை சேர்த்தது.

இந்திய அணியின் ஸ்பின்னர்கள் நீண்ட நேரமாக முயற்சித்தும் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அதில் சிராஜ் வீசிய ஒரு ஓவரில் ஃபெர்னாண்டோ 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்களை விளாசி அதிர்ச்சி கொடுத்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரியான் பராக் ஸ்பின்னர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 102 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் அசலங்கா 10 ரன்களிலும், சமரவிக்ரமா டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
40 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களாக இருந்தது. கடைசி 10 ஓவர்களில் இலங்கை அணி அதிரடியாக ரன்களை குவிக்க முடிவு செய்து, பவுண்டரிகளை விளாச தொடங்கியது. இதனால் சுழலில் ஏமாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், குசால் மெண்டிஸ் பொறுப்புடன் விளையாடி 77 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவரும் குல்தீப் யாதவ் வீசிய 49வது ஓவரில் 59 ரன்கள் எடுத்து வெளியேற, இறுதியாக இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது.
கடைசி 5 ஓவர்களில் மட்டும் இலங்கை அணி 41 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய கமிண்டு மெண்டிஸ் 19 பந்துகளில் 23 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ரியான் பராக் 9 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் ஒரேயொரு வேகப்பந்துவீச்சாளரான சிராஜ் 9 ஓவர்களில் 78 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்பின் 249 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதோடு, ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சிறப்பாக பவுலிங் செய்த இலங்கை அணியின் இளம் ஸ்பின்னர் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.