கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது. முதல் போட்டி டை-யில் முடிவடைந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியுள்ளது.
இந்த நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸில் தோல்வியடைந்துள்ளார். இதன்பின் இலங்கை கேப்டன் அசலங்கா பேசுகையில், இம்முறையும் பேட்டிங்கை தேர்வு செய்யப் போகிறோம். கடந்த 2 போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பிட்ச் இருக்கும் என்று நினைக்கிறோம்.

அகிலா தனஞ்செயாவுக்கு பதிலாக தீக்சனா சேர்க்கப்பட்டுள்ளார். நாங்கள் நல்ல மனநிலையில் இருக்கிறோம். அனைவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்தப் போட்டியில் ஒருவர் சதம் விளாசுவதை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், கடந்த 2 போட்டிகளிலும் நிச்சயம் இந்திய அணிக்கு சவால் அளிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். எங்களின் பிரச்சனைகளை கண்டறிந்துளோம். சில நேரங்களில் எதிரணியின் ஆட்டத்திற்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். . இந்திய அணியை விடவும் நன்றாக விளையாடி இருக்கிறார்கள். இந்த பிட்சை நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.
கடந்த 2 போட்டிகளில் நடந்த தவறுகளை சரி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் மற்றும் ரியான் பராக் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ரியான் பராக், சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
இலங்கை பிளேயிங் லெவன்: நிசாங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, அசலங்கா, லியானகே, கமிண்டு மெண்டிஸ், துனித் வெல்லாலகே, தீக்சனா, வான்டர்சே, அஷிதா ஃபெர்னாண்டோ