கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. அதேபோல் ரோஹித் சர்மா - கம்பீர் கூட்டணி முதல்முறையாக களமிறங்கவுள்ளது.
இந்த நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்பின் இலங்கை கேப்டன் அசலங்கா பேசுகையில், நாங்கள் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இந்தப் போட்டியில் 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்கள் என்ற காம்பினேஷனில் களமிறங்குகிறோம். மனதளவில் முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளோம். டி20 தொடரில் சில மறக்க முடியாத தவறுகளை செய்துள்ளோம்.

கேப்டனாக வீரர்களின் காயத்தையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இம்முறை மீண்டும் தவறுகளை செய்யக் கூடாது என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், இந்த மைதானத்தில் ஏராளமான போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளது. விராட் கோலி, ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் கம்பேக் கொடுத்துள்ளனர். அதேபோல் சிவம் துபேவும் விளையாடவுள்ளார்.
எங்களுக்கு உலகக்கோப்பை தொடர் சிறப்பாக அமைந்தாலும், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தோம். அனைத்து வீரர்களும் அணிக்குள் வந்து சிறப்பாக விளையாடும் வகையிலான சூழலை உருவாக்கியுள்ளோம். அதனால் இளம் வீரர்கள் சுதந்திரமாக விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். சூர்யகுமார் யாதவை போல் நான் பவுலிங் செய்வேன் என்று நினைக்கவில்லை.
ஏனென்றால் இந்திய அணியில் பவுலிங் செய்வதற்கு சிறந்த வீரர்கள் உள்ளதாக தெரிவித்தார். இந்திய அணியில் ரியான் பராக், ரிஷப் பண்ட், ஹர்சித் ராணா மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோர் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை அணியை பொறுத்தவரை முகமது ஷிராஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்
இலங்கை பிளேயிங் லெவன்: நிசாங்கா, ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, அசலங்கா, லியனாகே, ஹசரங்கா, வெல்லாலகே, தனஞ்செயா, அஷிதா ஃபெர்னாண்டோ, முகமது ஷிராஸ்