கொழும்பு: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை அணி நிர்ணயித்த 241 ரன்கள் எடுக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இருந்தும் இலங்கை அணி வென்றிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 தொடரில் வெற்றிபெற வேண்டிய போட்டிகளை கூட இலங்கை அணி சொதப்பி தோல்வியை சந்தித்தது. ஆனால் ஒருநாள் தொடரில் இலங்கை வீரர்கள் தோல்வி அடையும் என்று ரசிகர்களே சொன்ன போட்டிகளை, போராடி வெற்றி பெற்றுள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் கிட்டத்தட்ட தோல்வி உறுதியான நிலையிலும், 2 பந்துகளில் 2 விக்கெட்டை எடுத்து ஆட்டத்தை இலங்கை டை செய்தது.

தற்போது 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி எழுச்சி பெற்று இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. இந்திய அணி மோசமாக விளையாடி தோல்வியடைந்தது என்று சொல்வதை காட்டிலும், இலங்கை அணி சிறப்பாக விளையாடிய் வென்றது என்றே விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். இதற்கு இலங்கை அணியின் பயிற்சியாளர் ஜெயசூர்யா முதன்மை காரணமாக அமைந்துள்ளார்.
ஏனென்றால் இலங்கை அணி பவுலிங் செய்ய தொடங்கியதில் இருந்து பயிற்சியாளர் இருக்கையில் ஜெயசூர்யா ஒரு நிமிடம் கூட உட்காரவே இல்லை. அந்த அளவிற்கு ஆட்டத்தை கூர்ந்து கவனித்து அடுத்தடுத்து திட்டங்களை அனுப்பி கொண்டே இருந்தார். அதிலும் விராட் கோலிக்கு டிஆர்எஸ் எடுத்து நாட் அவுட் என்று தெரிய வந்த போது, ஜெயசூர்யாவின் ரியாக்சன் ஆச்சரியத்தை கொடுத்தது.
இலங்கை அணி தோல்வியடையும் போது வீரர்களிடம் பக்குவமாக நடத்தும் ஜெயசூர்யா, வெற்றியின் போது சக வீரரைப் போல் உற்சாகப்படுத்துகிறார். இத்தனைக்கும் இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக தான் ஜெயசூர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இடைக்கால பயிற்சியாளராக செயல்படும் போது கூட, வெற்றிக்காக கடைசி வரை போராட வேண்டும் என்று வீரர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி பவுலர்கள் இல்லாத போதும் கூட இலங்கை அணியால் வெற்றிபெற முடியும் என்று பயிற்சியாளர் ஜெயசூர்யா நிரூபித்துள்ளார். வாண்டர்சேவை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தது, ஸ்பின்னர்களை வைத்து அட்டாக்கை மாற்றியது, அக்சர் படேலுக்கான திட்டம் என்று ஒவ்வொரு முறையும் ஜெயசூர்யா கொடுத்த அறிவுரைகள் இலங்கை அணிக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.