பல்லேகேலே: இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ஆட்டத்தை ஆடினார் சுப்மன் கில். இதுவரை அவர் டி20 போட்டிகளிலும் நிதான ஆட்டத்தையே ஆடி வந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 130-ஐ தாண்டுவதே அவரின் மிகச்சிறந்த ஆட்டமாக பார்க்கப்பட்டது.
ஆனால், இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜெய்ஸ்வாலை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் சுப்மன் கில். என்னதான் துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டு இருந்தாலும் தான் சரியாக ஆடவில்லை என்பதை உணர்ந்து இருந்தார் சுப்மன் கில். மேலும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொன்ன ஒரு விஷயமும் சுப்மன் கில் ஆட்டத்தை மாற்றி இருக்கிறது.

இதை அடுத்து அதிரடி ஆட்டம் ஆடிய சுப்மன் கில் இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 34 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஆறு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். கிட்டத்தட்ட தான் சந்தித்த பந்துகளில் பாதி அளவுக்கு பவுண்டரிகளை அடித்து மிரட்டி இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 212.50 ஆக இருந்தது.
இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான். அவர் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து பயிற்சியாளராக தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த டி20 தொடருக்கு முன் நடந்த வலைப்பயிற்சியின் போதே கவுதம் கம்பீர் அனைத்து பேட்ஸ்மேன்களையும் அதிரடியாக ஆடி பயிற்சி மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார்.
டி20 போட்டிகளில் இனி இந்திய வீரர்கள் நிதான ஆட்டம் ஆடக்கூடாது என கூறி இருந்தார். இதை அடுத்து இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் தடுமாறி வந்த சுப்மன் கில், கம்பீர் பேச்சை கேட்டு இந்தப் போட்டியில் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
31 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள்.. ரியான் பராக் கொடுத்த சர்ப்ரைஸ்.. இலங்கையை பொட்டலம் கட்டிய இந்திய அணி
எப்போதும் அதிரடியாக ஆடக்கூடிய ஜெய்ஸ்வால் இந்த முறையும் அதை செவ்வனே செய்தார். 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார் ஜெய்ஸ்வால். அவரது ஸ்ட்ரைக் ரேட் 190 ஆக இருந்தது. சுப்மன் கில்லை விட ஜெய்ஸ்வால் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆட்டம் இழந்து வெளியேறிய நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார். அவர் 26 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இலங்கை 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.