கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதன் காரணமாக இலங்கை அணி 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. இதனால் இலங்கை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர்த்து அனைத்து பேட்ஸ்மேன்களும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஆட்டம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல் போட்டியில் 24 ரன்களிலும், 2வது ஒருநாள் போட்டியில் 14 ரன்களிலும், கடைசி ஒருநாள் போட்டியில் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.

3 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி மொத்தமாக 58 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி ஒரு அரைசதம் கூட அடிக்காமல் திரும்பி செல்வது இதுவே முதல்முறையாகும். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான காலத்தில் இருந்தே, விராட் கோலி இலங்கை அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
ஆனால் சமீப காலங்களில் ஸ்பின்னர்களுக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் விராட் கோலியை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்திற்கு பின் இலங்கை அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான குசால் மெண்டிஸ் விராட் கோலியின் ஜெர்சியில் கையெழுத்து பெற்றது தெரிய வந்துள்ளது.
விராட் கோலி ஓய்வறைக்கு சென்று தனது ஜெர்சியை எடுத்து வந்த குசால் மெண்டிஸிடம் கொடுத்த போது, தன்னிடம் இருந்த பேனாவை எடுத்து கையெழுத்துடன் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதன்பின் உடனடியாக விராட் கோலியும் ஜெர்சியில் கையெழுத்திட்டு அன்புப் பரிசாக வழங்கினார்.
விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் இலங்கை அணியின் நட்சத்திர வீரரான குசால் மெண்டிஸ் ஜெர்சியில் கையெழுத்து பெற்ற வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை பகிர்ந்து வரும் விராட் கோலி ரசிகர்கள், தோல்வியடைந்தாலும், மோசமான ஆடினாலும் என்றும் விராட் கோலி தான் ஹீரோ என்று பதிவிட்டு வருகின்றனர்.