கொழும்பு: டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்ற பின் உடனடியாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்தார். இனி விராட் கோலியின் கவனம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் மட்டுமே இருக்கும் என்று பார்க்கப்பட்டது. இதன்பின் ஓய்வில் இருந்த விராட் கோலி, கம்பீரின் கோரிக்கையை ஏற்று இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட ஒப்புக்கொண்டார்.
இதன்பின் இலங்கை வந்த விராட் கோலிக்கு அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரும் கம்பீரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகின. இலங்கை அணிக்கு எதிராக சிறந்த ரெக்கார்ட் வைத்திருப்பதால், விராட் கோலி புதிய சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை விளாசுவதற்கு விராட் கோலி 114 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இதனை ஒரே போட்டியில் விராட் கோலி அடிப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் முதல் போட்டியில் 24 ரன்களிலும், 2வது ஒருநாள் போட்டியில் 14 ரன்களிலும், கடைசி ஒருநாள் போட்டியில் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
3 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி மொத்தமாக 58 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இது விராட் கோலி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 19ஆக மட்டுமே உள்ளது. அதேபோல் 3 போட்டிகளிலும் ஸ்பின்னர்களிடம் தான் விராட் கோலி ஆட்டமிழந்திருக்கிறார்.
முதல் போட்டியில் ஹசரங்கா பவுலிங்கிலும், 2வது ஒருநாள் போட்டியில் வான்டர்சே பவுலிங்கிலும், 3வது ஒருநாள் போட்டியில் வெல்லாலகே பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். அதேபோல் 3 போட்டிகளிலும் எல்பிடபிள்யூ முறையிலேயே விராட் கோலி ஆட்டமிழந்திருப்பது அவரது தடுப்பாட்டத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக மோசமாக விளையாடி வரும் சூழலில், ஒருநாள் போட்டிகளிலும் தற்போது தடுமாற தொடங்கியுள்ளார். இதனால் டி20 கிரிக்கெட்டை போல் 50 ஓவர் கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்து இளம் வீரர்களுக்கு வழிவிடலாம் என்று விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.