கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் 241 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மா களத்தில் இருக்கும் போது எளிதாக வெற்றிபெறும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பின் இந்திய அணியின் சரிவு தொடங்கியது.
கண்மூடி திறப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்த இந்திய அணி, இறுதியாக 208 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் டை-யில் முடிவடைந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடைசி போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், தோல்வியின் பக்கம் நிற்கும் போது, அனைத்துமே வலியை தான் கொடுக்கும். முதல் 10 ஓவர்களை மட்டும் பேசி பிரயோஜனமில்லை. கன்சிஸ்டண்டாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதனை இந்திய அணி இன்று செய்யவில்லை.
இந்த தோல்வி நிச்சயம் மிகப்பெரிய ஏமாற்றம் தான். நம் முன் என்ன மாதிரியான பிட்ச் இருக்கிறதோ, அதற்கேற்ப தகவமைத்து கொண்டு விளையாட வேண்டும். இடது - வலது பேட்ஸ்மேன் கூட்டணி களத்தில் இருக்கும் போது, எளிதாக ஸ்ட்ரைக் மாற்ற முடியும். அதனால் தான் மிடில் ஆர்டரில் சில மாற்றங்கள் நடந்தது. அதேபோல் வாண்டர்சேவுக்கும் கிரெடிட் கொடுத்தாக வேண்டும். 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
நான் 64 ரன்கள் சேர்க்க முடிந்ததற்கு எனது பேட்டிங் ஸ்டைல் காரணம் என்று நினைக்கிறேன். நான் அப்படி பேட்டிங் செய்யும் போது, கொஞ்சம் ரிஸ்கும் இருக்கிறது. ஆனால் நான் நன்றாக பேட்டிங் செய்தால் போதாது. இந்திய அணி தோல்வியடைந்தால் நிச்சயம் ஏமாற்றம் தான். எனது இன்டெண்டை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.
இந்த பிட்சின் இயல்பை அறிந்து வைத்துள்ளோம். மிடில் ஓவர்களில் ரன்கள் சேர்ப்பது எளிதல்ல. அதன் காரணமாகவே பவர் பிளேவில் எவ்வளவு ரன்கள் சேர்க்க முடியுமோ, அதனை சேர்க்க முயற்சிக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்று கூர்ந்து பார்க்க விரும்பவில்லை. ஆனால் நிச்சயம் மிடில் ஓவர்களில் எப்படி செயல்பட்டுள்ளோம் என்பது குறித்து ஆலோசிப்போம் என்று தெரிவித்துள்ளார்.