கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மொத்தமாக சொதப்பி விக்கெட்களை பறிகொடுத்தது.
இலங்கை அணியின் இளம் வீரர் டுனித் வெல்லாலகே அபாரமாக பந்து வீசி இந்திய அணியின் 5 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இலங்கை பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணமாகவும் இருந்தார்.

இந்தியா - இலங்கை போட்டி : 2023 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக களமிறங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இதே மைதானத்தில் இரு நாட்களுக்கு முன் அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் அடித்து இருந்ததால் அதே போன்ற ஓர் ஆட்டத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்தியா திணறல் : ரோஹித் சர்மா மட்டும் துவக்கத்தில் அதிரடியாக ரன் குவித்து வந்தார். அரைசதமும் கடந்தார். சுப்மன் கில் நிதான ஆட்டமே ஆடி வந்தார். இலங்கையின் இளம் சுழற் பந்துவீச்சாளர் வெல்லாலகே பந்து வீச வந்த உடன் சுப்மன் கில் அவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன் பின் இந்திய அணி திணற ஆரம்பித்தது.
வெல்லாலகே விக்கெட் வேட்டை : விராட் கோலி அவரது பந்துவீச்சில் ரன்னே அடிக்க முடியாமல் தடுமாறி தன் விக்கெட்டை அவரிடமே பறிகொடுத்தார். அடுத்ததாக ரோஹித் சர்மா வெல்லாலகேவின் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அப்போது 2.1 ஓவர்கள் பந்து வீசி வெறும் 2 ரன்கள் கொடுத்து முதல் 3 விக்கெட்களை அவர் சாய்த்து இருந்தார்.
5 விக்கெட் : அடுத்து சிறிது நேரம் சமாளித்து 39 ரன்கள் சேர்த்த கே எல் ராகுல் வெல்லாலகே பந்துவீச்சில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா விக்கெட்டையும் எடுத்தார் வெல்லாலகே. 10 ஓவர்கள் பந்து வீசி 40 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இந்திய அணியின் 5 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.
சொந்த ஊர் : இதில் சுவாரசியமான விஷயம், போட்டி நடைபெற்ற கொழும்பு தான் அவரது சொந்த ஊர். இந்த மைதானம் அவருக்கு அதிகம் பழகிய மைதானம் என்பதும், ஆடுகளம் எப்போது சுழல் பந்துவீச்சுக்கு கை கொடுக்கும் என்பதையும் அவர் புரிந்து பந்து வீசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடிபணிந்த இந்தியா : இலங்கை வீரர் டுனித் வெல்லாலகேவின் சொந்த மண்ணில் அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக அவரிடம் சரணடைந்துள்ளனர். இந்தப் போட்டியில் மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் சரித் அசலங்கா அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
பரிதாபம் : ரோஹித் சர்மா மட்டுமே இந்தப் போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு ஆறுதல் அளித்தார். கடந்த போட்டியில் சதம் அடித்த விராட் கோலி 3 ரன்களும், ராகுல் 39 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தனர். ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதாக கூறினாலும், இந்திய அணியின் பேட்டிங் பரிதாபமாகவே இருந்தது.