கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மிடில் ஆர்டரில் நடந்த மாற்றங்களும், அதன்பின் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் நடத்திய சொதப்பல்களுமே காரணமாக அமைந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை கட்டமைக்க கம்பீர் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். அதற்காக தான் நம்பர் 4ல் கட்டாயம் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். அதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவரையும் நீக்கவும் அவர் விரும்பவில்லை. ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருவருமே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால் ஆல்ரவுண்டர் ஒருவரை நம்பர் 4ல் கொண்டு வர வேண்டும் என்று கருதுகிறார். இதன் காரணமாகவே வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, அக்சர் படேல் என்று அடுத்தடுத்து இடதுகை பேட்டிங் செய்யக் கூடிய ஆல்ரவுண்டர்களை களமிறக்கி வருகிறார். இந்த பிரச்சனை ஜடேஜா கம்பேக் கொடுக்கும் போது சரி செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ஜடேஜா இனி ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் தான்.
தற்போதைய சூழலில் இந்திய அணியில் இருக்கும் ஒரே இடதுகை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான். இதனால் 3வது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட்-ஐ உள்ளே கொண்டு வந்து, சிவம் துபேவை பெஞ்ச் செய்வது சரியான அணுகுமுறையாக இருக்கும். ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தில் சிவம் துபே 2 ஓவர்களை மட்டுமே வீசி இருந்தார். அவருக்கு பதிலாக ரியான் பராக்கை கொண்டு வருவது நல்ல மாற்றாக இருக்கும்.
டி20 தொடரில் ரியான் பராக் நன்றாகவே பவுலிங் செய்துள்ளார். பிட்சும் ஸ்பின்னுக்கு உதவி செய்வதால், 4 ஸ்பின்னர்கள் பவுலிங் செய்ய முடியும். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் ரியான் பராக்கிற்கு போதுமான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்தது மாதிரியும் அமையும். அவரால் நம்பர் 4 முதல் நம்பர் 7 வரை எந்த வரிசையில் பேட்டிங் செய்யக் கூடியவர்.
இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, அணியையும் கட்டமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த மாற்றங்களை செய்யும் பட்சத்தில் இந்திய அணியின் காம்பினேஷனும் சரியாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா கூட்டணி என்ன திட்டத்துடன் வரும் என்று ரசிகர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.