தேர்வுக்குழுவினரை பழிவாங்கிய வீராங்கனை.. 8 ஆண்டுகளாக தொடரும் சாதனை.. இலங்கை மகளிர் அணி முயற்சி வீண்
டம்புல்லா:இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி விளையாடும் போட்டியை காண, பல்லாயிர கோடி கணக்கில் காசை கொட்டி, ஒளிபரப்பு உரிமைகளை பெற நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன.
அவ்வளவு ஏன், அயர்லாந்து அணியுடன் இந்தியா விளையாடும் 2 டி20 போட்டியை கூட ஒளிபரப்பு செய்கிறார்கள்.

ஒருதலைப்பட்சம்
ஆனால், இந்திய மகளிர் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்த தொடர் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரை ஒரு தொலைக்காட்சி நிறுவனமும் கூட ஒளிபரப்ப முன்வரவில்லை. இது குறித்து பிசிசிஐயும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க, Fancode நிறுவனம் தங்களது ஆப்களில் போட்டியை ஒளிபரப்பு செய்ய முன்வந்தது.

செஃபாலி வெர்மா
முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தானா 1 ரன்னில் ஆட்டமிழக்க, மேக்னா டக் அவுட்டானார். தொடக்க வீராங்கனை செஃபாலி வெர்மா போராடி 31 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.

ஜெமிமா அதிரடி
கேப்டன் ஹர்மன்பிரித் கவுரும் 22 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த ஜெமிமா 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 138 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. இதன் மூலம், மகளிர் உலக கோப்பையில் இந்திய அணிக்கு தேர்வு செய்யாமல் இருந்த தேர்வுக்குழுவுக்கு தனது பேட் மூலம் ஜெமிமமா பதிலடி தந்தார்.

தொடரும் சாதனை
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம், கடந்த 8 ஆண்டுகளாக இலங்கை அணியிடம் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி தோற்றது இல்லை என்ற சாதனை தொடர்கிறது.


Click it and Unblock the Notifications