மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் அமெரிக்கா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி இன்று விளையாடுகிறது.
இந்த போட்டி நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியில் ரசிகர்கள் வெறுக்கும் வீரராக ஹர்திக் பாண்டியா இருந்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய வீரருக்கு ஒருவர் இந்திய ரசிகர்களை எதிர்ப்பு குரல் வெளியிட்டு வெறுத்தது என்றால் அது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும்தான். இந்த நிலையில் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதற்கு ஹர்திக் பாண்டியா ஒரு உதாரணமாக இருக்கிறார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு இந்திய அணி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார். அயர்லாந்து அணிக்கு எதிராக 27 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 24 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் எடுத்தார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இந்த மாற்றம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டிருக்கிறார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆகாஷ் சோப்ரா, ஹர்திக் பாண்டியாவை பார்த்து ரசிகர்கள் வெறுத்தனர். அவர் வரும்போது எல்லாம் ரசிகர்கள் எதிர்ப்புக் குரல் வெளியிட்டு வெறுப்பேற்றினார்கள்.
ஆனால் தற்போது பாருங்கள். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஹர்திக் என்று அவருடைய பெயரை சொல்கிறார்கள். வாழ்க்கை இப்படித்தான் மாறும். கிரிக்கெட் என்பது ஒரு சிறந்த விளையாட்டு. நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள் என்றால் உங்களை திட்டிய மக்கள் எல்லாம் உங்களை பாராட்ட தொடங்கி விடுவார்கள். உங்களுடைய வெற்றிக்காக பிரார்த்தனை செய்ய தொடங்குவார்கள்.
ஒரு கிரிக்கெட் வீரராக எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை நான் சொல்கின்றேன். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் கிரிக்கெட்டை பின்தொடரும் 140 கோடி பேர் உங்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள். உங்களைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்றால் கூட அவர்கள் பிரார்த்தனையை விட மாட்டார்கள். இது மிகப் பெரிய ஆசீர்வாதம் ஆகும். இந்த பிரார்த்தனை ஹர்திக் பாண்டியாவுக்கும் வந்து சேர்ந்திருக்கும். இது அவருடைய வாழ்க்கையை மாற்றி இருக்கும். இதனால் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று ஆகாஷ் சோப்ரா பாராட்டி இருக்கிறார்.