நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு நடுவர்கள் ஐந்து ரன்கள் பெனால்டி விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் ரன் சேர்ப்பது என்பது விலைவாசியை சமாளித்து குடும்பத்தை ஓட்டுவதை விட மிகக் கடினமான பணியாக மாறிவிட்டது.
இந்த மைதானத்தில் 120 ரன்கள் என்று இலக்கை கூட பாகிஸ்தான் அணியால் தொடமுடியவில்லை. அந்த அளவிற்கு ஆடுகளம் தோய்வாக மாறிவிட்டது. இந்த நிலையில் இன்றைய லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து 110 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்ய தடுமாறியது. ரோகித் சர்மா,விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க சிவம் துபே மற்றும் சூரியகுமார் ஜோடி பொறுப்பான விளையாடி ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் 30 பந்துக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது.
இதே வேற மைதானமாக இருந்தால் இது மிக ஈசியாக சேஸ் செய்யக்கூடிய இலக்காகும். ஆனால் நியூயார்க் மைதானத்தில் இது கடினமாக இருந்தது. இந்த நிலையில்தான் ஐசிசி யின் புதிய விதியால் அமெரிக்காவுக்கு ஐந்து ரன்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
இதன் மூலம் 30 பந்துக்கு 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தது. பொதுவாக விக்கெட் கீப்பரின் ஹெல்மெட்டில் பந்து பட்டால் நடுவர்கள் ஐந்து ரன்கள் அபாரமாக விதிப்பார்கள். ஆனால் அப்படி ஏதும் நடைபெறாத பட்சத்தில் ஏன் நடுவர்கள் இவ்வாறு செயல்பட்டார்கள் என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
அதற்கு காரணம் ஐசிசி யின் இந்த புதிய விதி தான். போட்டியை விரைவாக நடத்த வேண்டும் என்பதற்காக தான் ஐசிசி இப்படி ஒரு விதியை கொண்டு வந்திருக்கிறது. அதாவது ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் ஒரு நிமிடத்திற்கு மேல் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
அப்படி மூன்றாவது முறையாக கேப்டன் ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டால், புதிய விதிப்படி ஐந்து ரன்கள் பெனால்டி விதிக்கப்படும். அமெரிக்க அணி ஒரு ஓவருக்கும் மற்றொரு ஓவருக்கும் இடைவெளியில் மூன்றாவது முறையாக ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டதால் ,நடுவர்கள் பெனால்டி வழங்கினார்கள். இது இந்தியாவுக்கு சாதகமாக மாறியது.