நியூயார்க் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று சூப்பர் ஹிட் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. மூன்று போட்டிகளும் கடினமான நியூயார்க் ஆடுகளத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி கடும் போராட்டத்திற்கு பிறகு வெற்றியை பெற்றது.
அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட இந்தியா கொஞ்சம் தடுமாற்றத்தை கண்டது என்றால் ஆடுகளம் எந்த அளவிற்கு மோசமான என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். இது குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த ஆடுகளத்தில் விளையாடுவது மிகவும் கடினமான பணி என்று எனக்கு தெரியும்.

இந்த இலக்கை சேஸ் செய்வது என்பது கடினம் தான். சூரியகுமார் மற்றும் சிவம் துபே ஆகியோர் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார்கள். அமெரிக்க அணியில் இடம் பிடித்திருக்கும் நிறைய வீரர்களுடன் நாங்கள் விளையாடி இருக்கின்றோம்.
அவர்களுடைய முன்னேற்றத்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. எம்.எல்.சி கிரிக்கெட்டில் கூட நான் அமெரிக்க வீரர்களை பின் தொடர்ந்து பார்த்தேன். அவர்களுடைய கடின உழைப்பிற்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது. இந்த ஆடுகளத்தில் ரன்கள் சேர்ப்பது மிகவும் கடினம் என்று எங்களுக்கு தெரியும்.
இதனால் பந்துவீச்சாளர்கள் குறைந்த இலக்கில் அமெரிக்கா அணியை கட்டுப்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். அதற்கு ஏற்றார் போல் ஆர்ஸ்தீப் சிங் அபாரமாக பந்துவீச்சில் செயல்பட்டார். எங்களுக்கு பந்துவீச்சில் பல வீரர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் தான் சிவம் துபே போன்ற வீரர்கள் பிளேயிங் லெவனில் இருக்கின்றார்கள்.
தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மிகப்பெரிய நிம்மதியை கொடுக்கின்றது. நியூயார்க் மைதானத்தில் விளையாடுவது சவாலான காரியமாக இருந்தது. கொஞ்சம் கூட எளிதாக இல்லை. இங்கு விளையாடும் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.
கடைசி வரை கடுமையாக போராடி போட்டியை இறுதிவரை கொண்டு சென்றால் மட்டுமே வெற்றி கிடைக்கின்றது. சூரிய குமார் யாதவ் தமக்கு இப்படியும் விளையாட தெரியும் என்று காட்டியிருக்கிறார். இதை தான் அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கின்றோம். சிவம் துபே உடன் அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் தான் எங்கள் அணிக்கு வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்று ரோகித் சர்மா கூறினார்.